தமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்
சென்னை: தமிழ் மொழியை பாதுகாக்க உருப்படியாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், தமிழுக்கு துரோகம் செய்யாமலாவது இருங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துளார்.
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை விமர்சித்து ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தி பயிற்சி நடவடிக்கையை திமுக முன்னெடுத்த போராட்டம் காரணமாக திரும்பப் பெறப்பட்டது வரவேற்கத்தக்கது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக போராட்டம்
தமிழ் மொழி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி அளிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக மாணவரணியினர் இதனைக் கண்டித்து கடந்த வாரத்தில் போராட்டத்தில் குதித்தனர்.
தமிழ் அழிப்புத்துறை
மேலும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட காட்டமான அறிகையில், தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் அழிப்புத்துறையாக மாறிவிட்டது என சாடியிருந்தார். இந்நிலையில் இந்தி மொழி பயிற்சி அளிப்பது திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
ட்வீட்டரில் கருத்து
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், அண்ணா பெயர் தாங்கிய கட்சியின் ஆட்சியில் , இந்தி கற்றுத்தர எடுத்த நடவடிக்கையை, திமுக போராட்டம் காரணமாக திரும்பப்பெற்றதை வரவேற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
துரோகம் வேண்டாம்
தமிழ் மொழியைக் காக்க தமிழக அரசு உருப்படியாக எதுவும் செய்யாவிட்டாலும் கூட, தமிழுக்கு துரோகம் செய்யாமலாவது இருக்க வேண்டும் என ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.