தமிழக அரசை நாங்கள் சும்மா விடமாட்டோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாளை மறுதினம் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் தொடர்பாக புயலை கிளப்புவோம் என்றும், திமுக சும்மா விடாது எனவும் ஆவேசம் காட்டினார்.
மத்திய அரசு அறிவிக்க வேண்டியதை முதல்வர் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.
ரஜினி வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டி..? ரகசிய ஆய்வு நடத்தி வரும் டீம்
ஸ்டாலின் பேச்சு
சென்னை மதுரவாயலில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல மணவிழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலை மனதில் வைத்து விவசாயிகளை ஏமாற்றும் செயலில் இறங்கியுள்ளதாகவும், பாவம் அது தெரியாமல் சிலர் அவருக்கு நன்றி கூறி வருவதாகவும் தெரிவித்தார். வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டிய பொறுப்பும், அதிகாரமும் மத்திய அரசுக்கு உள்ள நிலையில் முதல்வர் அறிவித்திருப்பது ஏமாற்று வேலை என சாடினார். நீட் தேர்விலும் இப்படித்தான் வரவே வராது எனக் கூறியவர்கள் பின்னர் பல்டி அடித்தார் என விமர்சித்தார்.
தைரியமில்லை
டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்திருந்தாலும், அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. மத்திய அரசிடம் துணிவாக பேசி முதல்வர் அறிவித்ததை செயல்பாட்டுக்கு கொண்டுவருவார்களா என்பது சந்தேகம் தான் என்றும், காரணம் அதிமுக அடிமை ஆட்சி நடத்தி வருவதாகவும், இதனால் அவர்கள் டெல்லியில் வற்புறுத்தி எதையும் பேசமாட்டார்கள் என்றும் தாக்கினார். அதிமுக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் விரைவில் வரும் என கூறினார்.
வேலை நடக்கிறது
முதலமைச்சர் அறிவிப்பு ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், இதுவரை 31 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார். முதலில் அந்த 31 கிணறுகளை மூட தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமலேயே விவசாய பெருங்குடி மக்களை ஏமாற்றுவதற்கு முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சாடினார். முதல்வரின் அறிவிப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டதா எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின் அதுபற்றி உடனடியாக பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
திடீர் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை மனதில் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும், ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் அதிமுக அடைந்த படுதோல்வியை நினைத்து இப்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை அதை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் கூட அதை தடுக்க அதிமுக அரசுக்கு திராணியில்லை எனக் குறிப்பிட்டார். அப்படியிருக்க மேடையில் இவர் அறிவித்ததை மத்திய அரசு எப்படி நிறைவேற்றும் எனக் கேள்வி எழுப்பினார்.