டெங்குவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை-மு.க.ஸ்டாலின்
சென்னை: கொடிய டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சென்னை மதுரவாயலில் 8வயது சிறுவன் ரோகித்தும், முகப்பேரில் 6 வயது சிறுமி மகாலட்சுமியும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானது தமக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக கூறியுள்ளார். டெங்குவை தடுக்க தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவே இரண்டு குழந்தைகளின் உயிர் பறிபோனதற்கு காரணம் என சாடியுள்ளார்.
சின்னஞ்சிறு குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாக காரணமாக இருக்கும் அதிமுக அரசின் அலட்சியத்திற்கும், மெத்தனத்திற்கும் தனது கடும் கண்டத்தை தெரிவித்துக்கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி உயிர்களை காப்பற்ற தேவையான அனைத்து வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்க வேண்டும் எனக் கெட்டுக்கொண்டுள்ளார்.
அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என காத்திருக்காமல், திமுக மருத்துவ அணியினர் டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு, பொதுமக்கள் மத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். கடந்த ஆண்டுகளில் டெங்குவால் ஏற்பட்ட உயிரிழப்புகளை படிப்பினையாக பெறாமல் அதிமுக அரசு தொடர்ந்து அலட்சிய போக்குடனே நடந்துகொள்வதாக சாடியுள்ளார்.