முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல்- ஆளுநரிடம் கொடுத்து விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல்களையும் அதற்கான ஆதாரங்களையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். மேலும் இந்த புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்ட தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக, மநீம, நாம் தமிழர், பாஜக என அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளன.
திமுகவினர் நாளை முதல் 16,000 கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று தேர்தல் பிரசாரம் நடத்த உள்ளனர். இந்த நிலையில் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முக ஸ்டாலின் சந்தித்தார்.
ரூ.2500 பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக அரசு மீது ஊழல் புகார்
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை இல்லை
நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை எந்த விசாரணையும் நடத்தவில்லை. இதனால் முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல்களை ஆதாரங்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கொடுத்திருக்கிறோம்.
விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட கோரிக்கை
ஆளுநர் தமக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இந்த ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட முடியும். ஆகையால் ஊழல் புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
அடுத்த பட்டியல்
இதேபோல் மாவட்டங்களில் அமைச்சர்கள் செய்த முறைகேடுகள், ஊழல் விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அவற்றை பார்ட்-2 ஆக ஆளுநரிடம் கொடுக்கவும் இருக்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.