தமிழகத்தை சுற்றி வர திட்டம் தயார்... பயணத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கடந்த 2016-ம் ஆண்டு நமக்கு நாமே பயணம் சென்றது போல் இந்த முறையும் அது போன்ற மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்கிறார் அவர்.
ஆனால் இந்த முறை சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டிற்கு முன்பே அவர் தனது பயணத்தை தொடங்குவதால் பட்டிதொட்டி எங்கும் தனது காலடி தடங்கள் இல்லாத இடமே இருக்கக்கூடாது என நினைக்கிறார்.
மக்கள் சந்திப்பு
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்காக தீவிரமான முறையில் அவர் பணியாற்றி வருகிறார். கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை தயவுதாட்சண்யமின்றி தூக்கி எறிந்து புதிய முகங்களை பொறுப்புகளில் நியமித்து வருகிறார். புகாரில் சிக்கும் நிர்வாகிகளை கட்சியை விட்டு விரட்டியடிக்கிறார். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஜெயலலிதா பாணியில் தனக்கு மக்கள் துணை போதும், அவர்களின் ஆதரவு போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் ஸ்டாலின். அதனால் நிர்வாகிகளை பற்றி அவர் கவலைக்கொள்ளவில்லை.
ஒரு வருடம்
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்டு அடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் ஸ்டாலின். இதற்கான பயண திட்டங்கள் கூட தயாராக உள்ளன. கடந்த முறை குமரியில் தொடங்கி சென்னையில் நமக்கு நாமே பயணத்தை முடித்தார் ஸ்டாலின். ஆனால் இந்த முறை சென்னை அல்லது காஞ்சிபுரத்தில் தொடங்கி தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு ஊரில் தனது பயணத்தை முடிக்கவுள்ளார். இவருடன் பயணம் செய்ய, ஆலோசனைக் கூற ஒரு பிரத்யேக டீம் தயாராகி வருகிறது.
காலடி தடம்
தமிழகத்தில் தனது காலடி தடம் பதியாத ஊரே இருக்கக்கூடாது என எண்ணும் ஸ்டாலின், அதற்கேற்றார்போல் கிராமங்களை உள்ளடக்கும் வகையில் பயண ரூட்டை ஏற்பாடு செய்யக்கூறியுள்ளார். கிராம சபை கூட்டங்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஓரளவு திமுகவுக்கு கைகொடுத்து உதவியது. இதனால் கிராமங்கள் வாரியாக இந்த முறை ஸ்டாலின் அதிகம் பயணிக்க உள்ளார். இதன் மூலம் ஊரகப்பகுதிகளில் உள்ள இரட்டை இலை வாக்குகளை உதயசூரியனுக்கு மாற்றமுடியும் என்பது அவரது நம்பிக்கை.
நடை நாயகன்
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நடந்தே அம்மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். அவரது பாணியில் நெடுஞ்சாலைகளை தவிர்த்து ஊருக்குள் மட்டும் நடந்து செல்ல திட்டமிடுகிறார் ஸ்டாலின். சுற்றுப்பயணம் செல்வதற்கான பென்ஸ் வேன் தயாராக உள்ளபோதும், அதில் ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மார்ச் மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.