தாய்மொழி நாள்: தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை இந்திய அரசின் அலுவல் மொழியாக்கிட உறுதியேற்போம்-ஸ்டாலின்
சென்னை: உலக தாய்மொழி தினமாகிய இன்று தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை இந்திய அரசின் அலுவல் மொழியாக்கிட உறுதியேற்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சமூக வலைதளப் பக்கங்களில் ஸ்டாலின் பதிவு செய்துள்ளதாவது:
தாய்க்கு இணையான - உயிருக்கு நேரான தாய்மொழியைப் போற்றி வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நன்னாளே, தாய்மொழி நாளாகும்.
செம்மொழி எனும் சிறப்புப் பெற்ற தொன்மொழியாம் நம் தமிழ்மொழி காலந்தோறும் வளர்ச்சி பெற்று உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. எத்திசையும் புகழ் மணக்கும் அதன் சிறப்பினை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தெரிவு செய்து, அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கிய முத்தமிழறிஞர் கலைஞரை என்றென்றும் நினைவில் கொள்வோம்.
தமிழ்க்கொடி ஏந்தி களம் கண்ட அவர் வழியில், இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள நம் உயிரனைய தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கிட உறுதியேற்போம். #MotherLanguageDay
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.