சட்டமன்றத் தேர்தல் முடியட்டும்... வட்டியும் முதலுமாக வச்சுக்கறேன்... மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!
சென்னை: பணம் பாதாளம் வரை பாயும் என்ற மமதை எண்ணத்துடன் ஆட்சியாளர்கள் செயல்படுவதாகவும் பணத்தால் சட்டமன்றத் தேர்தலை வளைத்து விடலாம் எனப் பகல் கனவு காண்பதாகவும் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
அ.தி.மு.க.வின் பகல்கனவு 2021 தேர்தலில் சிதைந்து சிதறிவிடும் என்றும் அப்போது வட்டியும் முதலுமாக சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள காட்டமான அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மரணக் குழி
மரணக்குழியிலும் ஊழல் நாற்றமா? கொள்ளைப் பணத்தைப் பதுக்கிவைத்துத் தேர்தலை விலைபேச நினைக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி கும்பலின் மோசடிகளுக்குத் துணை போகிறதா மத்திய பா.ஜ.க. அரசு? அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், சக அமைச்சர் மரணமடையும் தருணத்திலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல், பதுக்கிய பணத்தை மீட்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் என்பதைப் பத்திரிகைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன.
புலனாய்வு பத்திரிகை
அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடியபோது, அமைச்சர் தரப்பிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக, அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்தது என்றும், பணத்திற்குத் தேவையான உத்தரவாதம் கிடைத்தபிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானது என்றும், அதிர்ச்சி தரும் செய்திகள் நாளேடுகளிலும் புலனாய்வுப் பத்திரிகைகளிலும் விரிவாக வெளியாகியுள்ளன.
புறந்தள்ள முடியாது
அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தங்களுக்குப் பதவி தந்து வாழ்வளித்ததாக உதட்டளவில் மட்டும் உச்சரிக்கும் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்தின் மர்மத்தையே புதைத்தவர்கள். எளிமையாகத் தோற்றமளித்த - அதிகம் அறியப்படாத ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் இருக்கலாம் என்பதைப் புறக்கணிக்க முடியவில்லை.
கைது நடவடிக்கை
பத்திரிகையில் வந்த செய்திகளை மட்டும் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டலாமா என ஆளுந்தரப்பினர் இதையும்கூட மரணக்குழியில் போட்டுப் புதைக்க நினைக்கலாம். ஆனால், அவர்களால் ஊழல் நாற்றத்தை மறைக்க முடியாது என்பதற்கு மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் தொகுதியில் காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே சான்றாக இருக்கின்றன.
சரமாரி கேள்வி
நூற்றுக்கணக்கான கோடிகள் சட்டவிரோத ‘விசாரணைகள்' மூலமாகவும், சட்டத்தை வளைத்து நடைபெறும் கைதுகள் மூலமாகவும், கைமாறுவதைக் கண்காணிக்க வேண்டிய வருமான வரித்துறை, வருமான புலனாய்வுத் துறை, ஏன் தேர்தல் ஆணையமும் கூட, இது குறித்து சட்ட நெறிமுறைகளை அனுசரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? புலனாய்வுப் பத்திரிகைகளுக்குத் தெரிந்த செய்திகள், மத்தியப் புலனாய்வுத்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் தெரியாதா?
எச்சரிக்கை
மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால், அ.தி.மு.க.வின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். வட்டியும் முதலுமாக, கூட்டு வட்டியையும் சேர்த்து, சட்டம் தன் கடமையைச் செய்யும்; அதன் கரங்கள் வேண்டுமளவுக்கு நீளும்!