வில்லில் இருந்து விடுபட்ட கணையாக களம் இறங்குங்கள்.. தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: வில்லில் இருந்து விடுபட்ட கணையாக களம் இறங்குங்கள் என தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருக்கையில், வில்லில் இருந்து விடுபட்ட கணையாகக் களமிறங்கி விண்ணிலிருந்து ஒளிவிடும் கதிராக வெளிச்சம் பாய்ச்ச, ஆயத்தமாகி விட்டீர்கள். எங்கு சென்றாலும் எப்போது தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்பு தான் மக்களிடம் தெரிகிறது. தி.மு.க.வினரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல இது! தமிழ்நாட்டு மக்களின் இரண்டாண்டு கால எதிர்பார்ப்பும் இதுதான். எங்களுக்கு விருப்பமில்லாத ஆட்சியை விரட்ட மாட்டீர்களா என நேரடியாகவே கேட்கிறார்கள். இன்னும் விரட்டவில்லையே என்று நம் மீது கோபம் கொள்கிறார்கள். ஆட்சிமாற்றம் நிச்சயம். அது ஜனநாயக வழியில் நடைபெற வேண்டும் என்பதே நமது லட்சியம்.
தீர்வை பெறுவதற்கு
கூடிக் கலைவதல்ல, தி.மு.க.வின் பெரும் சேனை. தமிழக மக்களின் துயரக் கண்ணீரைத் துடைப்பதற்கு எங்களின் கரங்கள் எப்போதும் தயாராக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால் விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற அடாவடிச் செயலை ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதனை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தி.மு.க. என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்ற உறுதியைத் தெரிவித்ததோடு, இந்தப் பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பி உரிய தீர்வை பெறுவதற்கு முயற்சிப்போம் என்கிற உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளேன்.
தீர்மானம்
ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பைப் பெறுவதற்காக ஜனநாயகத்தின் எஜமானர்களாம் பொதுமக்களை வீடு, வீடாக, வீதி, வீதியாக, ஊர், ஊராக சந்திப்பது என்று மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது. மக்களை சந்திப்பது என்பது தி.மு.க.விற்கு புதிய அணுகுமுறையன்று. ஏனெனில், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைத் தேடிப் போகிறவர்கள் அல்ல நாம்! வென்றாலும் மக்கள் நலன் அறிந்து திட்டங்களைத் தீட்டுவோம். தோற்றாலும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போம். உறுதியாகச் சொல்லலாம், நமது பயணம், வெற்றிப் பயணம். ஊழல் மலிந்த உலுத்தர்களின் ஆட்சிக்கு எதிராகத் தொடங்குகின்ற ஜனநாயகப் போர் இது.
நம்முடைய பணி
மத்தியில் ஆட்சி செய்கிற பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகவும், மாநிலத்தை ஆளுகின்ற மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகவும் திரண்டிருக்கும் மக்கள் படையை ஒருங்கிணைக்கும் பணியே நம்முடைய களப்பணி. மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முப்பெரும் முழக்கங்களை முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ஜனவரி 8-ந்தேதி முதல் பிப்ரவரி 17-ந்தேதி வரை ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
அனுமதிக்கப்படும்
மாவட்ட செயலாளர்கள் தங்களின் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகளை அழைத்து ஜனவரி 8-ந்தேதிக்கு முன்பாக கூட்டம் நடத்தி, ஊராட்சிப் பயணத்தின் நோக்கங்களையும் செயல்முறைகளையும் விளக்கிட வேண்டும். அத்துடன், பேச்சாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை தொடர்பான பட்டியலையும் அவர்களுக்கு வழங்கிட வேண்டும். ஊராட்சி பகுதிகளில் கொடிக்கம்பங்களில் கட்சி கொடி ஏற்றப்படல் வேண்டும். ஆடம்பர ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி மரத்தடி, சந்தை, கலையரங்கம், பொதுத்திடல், பள்ளி வளாகம் என அனுமதிக்கப்படும் இடங்களில் இருநூறுக்கும் குறைவில்லாத பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் ஊராட்சி சபைக் கூட்டங்களை ஊராட்சி செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அவசியம்
ஊராட்சிகள் தோறும் சென்று பேசக்கூடிய தலைமைக் கழக பிரதிநிதிகளின் பட்டியல் தயாராக உள்ளது. அது குறித்து, மாவட்ட செயலாளர்களுடன் கலந்தாலோசித்து தங்களுக்கான ஊராட்சிகளையும் கூட்டம் நடத்தப்படும் தேதிகளையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பேச்சாளரும் ஊராட்சி செயலாளர்களின் இல்லத்திற்குச் சென்று நலன் விசாரித்து, அங்கு ஊராட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் ஆகியோரிடம் கலந்தாலோசிப்பது அவசியமாகும்.
மக்கள் மனதில்
தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளை ஒட்டி, ஜனவரி 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கூட்டங்களுக்கு இடைவெளிவிட்டு, 19-ந்தேதியில் இருந்து தொடர வேண்டும். நமது ஒரே இலக்கு, ஆட்சி மாற்றம், அதுவே மக்களின் விருப்பம். உங்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம் என்ற உறுதியினை வழங்கி, நம்பிக்கையைப் பலப்படுத்தி மக்களின் மனங்களை வெல்வோம். ஊராட்சிகள் தோறும் மக்களின் மனங்களில் விதைக்கப்படும் விதை, உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்து ஜனநாயகக் கழனிகளிலும் விளையும். உலுத்தர்களின் ஆட்சி விரட்டப்பட்டு நல்லாட்சி மலரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.