தனித்திருப்போம்... மனத்திடத்துடன் துணிந்திருப்போம்... மு.க.ஸ்டாலின் மடல்
சென்னை: கொரோனா அச்சம் தணியும்வரை தனித்திருப்போம், மனத்திடத்துடன் துணிந்திருப்போம் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே திசை தெரியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு;
ஹலோ.. எப்படி இருக்கீங்க..? வீடியோ கால் மூலம் அழைத்து விசாரித்த மு.க.ஸ்டாலின்
பதற்றம்
உலகையே இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. வல்லரசு நாடுகளே போகும் திசை தெரியாமல் தினந்தோறும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க் முடங்கி வெறிச்சோடியிருக்கிறது. அதிபர் டிரம்ப் ஆழ்ந்த ஆலோசனையில் இறங்கி இருக்கிறார். உலகத்தில் ஒற்றை மனிதர்கூட மனநிம்மதியாக இருக்க முடியாதபடி, மிகப் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமியான கொரோனா வைரஸ்.
தனித்திருத்தல்
இந்தக் கொடுந்தொற்றின் பெருந்தாக்கத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என 21 நாள் ஊரடங்கினை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். இன்றுடன், 5 நாட்கள் ஆகிவிட்டன. நாடு மிகப் பெருமளவு முடங்கியிருக்கிறது. நம்முடைய தமிழ்நாடும் முடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு முதற்கட்ட நடவடிக்கை மற்றவர்களிடமிருந்து தனித்திருத்தல்தான் என்பதை உலக சுகாதார நிறுவனம் தொடங்கி பலரும் வலியுறுத்திய காரணத்தால்தான், உங்களில் ஒருவனான நான் இதனைத் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறேன்.
ஊரடங்கிற்கு வரவேற்பு
பிரதமர் மோடி அவர்கள் மார்ச் 22 அன்று அறிவித்த ‘மக்கள் ஊரடங்கு', அதன்பிறகு தமிழக அரசு அறிவித்த ஏப்ரல் 1-ந்தேதி வரையிலான 144 தடையுத்தரவு ஆகிய அறிவிப்புகளின்போதே, அதன் அவசியத்தை மனமார வரவேற்றோம். அதேநேரத்தில், அதனால் ஏழை - எளிய சராசரி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் நினைவூட்டினோம். நாடு முழுவதும் தற்போது கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு குறித்து பிரதமர் அவர்கள் தொலைக்காட்சிகளில் உரையாற்றியபோதே அதனை வரவேற்றது தி.மு.கழகம்.
பசி பட்டினி
ஊரடங்கு நடைமுறைக்கு வந்த நான்காவது நாளில் தலைநகர் டெல்லியிலும் உத்தரபிரதேசத்திலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பசி பட்டினிக் கொடுமையால், கொரோனா தொற்று பற்றிக்கூட கவலைப்படாமல் மூட்டை முடிச்சுகளைச் சுமந்துகொண்டு, தங்கள் குடும்பத்தாருடன் கூட்டம் கூட்டமாக நடந்து சென்ற காட்சிகளைக் கண்டபோது, மனம் கலங்கித் தவித்தது.
சோக முகம்
சொந்த மாநிலத்தை விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காக வந்திருந்த எந்த மாநிலத்து மக்களாக இருந்தாலும் அவர்களுக்கும் நம்மைப் போலத்தானே வயிறு இருக்கிறது என்ற எண்ணமே ஏற்பட்டது. அவர்களின் வாழ்வாதாரம் குறித்து முன்கூட்டியே கவனிக்காத நிலையில், கொரோனா பாதிப்பால் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகட்டும், இப்போதைக்குப் பட்டினியால் சாக முடியாது என அவர்கள் பல நூறு கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள தங்கள் ஊரை நோக்கி நடந்தே செல்லத் துணிந்தது, இந்தியாவின் இன்னொரு சோகமான முகத்தை நமக்குக் காட்டியது.
வாலை பிடிக்காதீர்
பேரிடரான சூழலில், 'தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போல' நடவடிக்கைகள் அமைந்துவிடக்கூடாது என்கிற அக்கறையுடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் காணொலிக் காட்சி வழியாகவேனும் நடத்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன்.பலதரப்பட்ட கருத்துகளுடன், ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன், பல்வேறு பரிமாணங்களையும் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த ஒரே நோக்கிலான முயற்சியே இந்தப் பேரிடர் காலத்தைச் சேதாரம் சிறிதுமின்றிக் கடந்திட உதவிகரமாக இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.