மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்று சொல்லுங்க… அன்புமணியை வறுத்தெடுத்த ஸ்டாலின்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விளம்பரம் வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திராவிட கட்சிகளுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது... வேண்டும் என்றால் பத்திரம் எழுதி தருகிறேன் என்று கூறி வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்... திடீரென அதிமுக கூட்டணியில் ஐக்கியமானார். 7 பிளஸ் 1 என்று தொகுதிகளையும் அள்ளினார்.
பாமகவின் இந்த யு டர்ன் செயல்பாடு, அக்கட்சியினரை மட்டுமல்லாது தமிழக மக்களையும் கடுமையாக விமர்சிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்த திமுக தலைவர் ஸ்டாலின் போகிறஇடத்தில் எல்லாம் பாமகவை வசைமாரி பொழிகிறார்.
திருமண விழாவில் ஸ்டாலின்
இந் நிலையில், சென்னை திருவேற்காட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கேயும் அவர் பாமக மீதான தமது விமர்சனத்தை முன் வைக்க தவறவில்லை. விழாவில் அவர் பேசியதாவது:
கூட்டணி வைக்கவில்லை
திராவிட இயக்கத்தோடு என்றைக்கும் நாங்கள் கூட்டு வைக்க மாட்டோம் என சொன்னார்கள், நல்ல வேளை நம்மிடத்தில் அவர்கள் கூட்டு வைக்கவில்லை.
அதிமுக திராவிட இயக்கமா?
அதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், அதிமுகவோடு அவர்கள் கூட்டணி வைத்திருக்கின்ற காரணத்தால் அதிமுக திராவிட இயக்கம் இல்லை என்பதை நாட்டுக்கு வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள்.
சூட்கேஸ் மணி
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெளிநாட்டில் ஒரு தலைவர் வெளியிட்ட விளம்பரத்தை காப்பியடித்து போட்டார்கள். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று மூன்று வாசகம் போட்டார்கள். அது அப்பொழுது, இப்பொழுது இந்தத் தேர்தலில் மாற்றிப்போட வேண்டும். எப்படி என்றால் மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்று.
பண நலக்கூட்டணி
ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாக ஒரு தேச துரோக கூட்டணியாக, மக்கள் விரோத கூட்டணியாக அது இன்றைக்கு அமைந்திருக்கிறது. அதிமுக, பாமக ஒரு மக்கள் நலக் கூட்டணி இல்லை... இது பண நலக் கூட்டணி என்று ஸ்டாலின் பேசினார்.