அதிக உரிமை எடுத்துக்கொண்டாரா ஓ.எம்.ஜி. சுனில்... திடீர் விலகலுக்கு பின்னணி
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த சுதந்திரத்தை ஓ.எம்.ஜி.குழுத் தலைவர் சுனில் அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டதால் தான் அவர் சித்தரஞ்சன் சாலையை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொடக்கத்தில் தலைமையுடன் மட்டும் நேரடித் தொடர்பில் இருந்த ஓ.எம்.ஜி. டீம், பிறகு நாளடைவில் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடனும் நெருக்கம் காட்டியது.
மாவட்டச் செயலாளர்கள் சிலரும், மாநில நிர்வாகிகள் சிலரும் சுனிலை பிடித்தால் காரியம் முடியும் என்ற மனநிலைக்கு ஒரு கட்டத்தில் வந்துவிட்டனர். இது திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
ஓ.எம்.ஜி. டீம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் அரசியல் திட்டமிடல் பணிகளை செய்து வந்த சுனில், கடந்த மாதம் அங்கிருந்து இருந்து வெளியேறினார். இதற்கு காரணமாக பிரசாந்த் கிஷோர் வருகை எனக் கூறப்பட்டாலும் சுனில் மீதும் ஸ்டாலினுக்கு சில மாதங்களாகவே அதிருப்தி நிலவியதாம்.
காற்றை போல்
திமுகவில் முதன் முறையாக ஓ.எம்.ஜி.குழு பணியமர்த்தப்பட்டவுடன் அந்தக் குழு உறுப்பினர்களையும் சரி, தலைவரான சுனிலையும் சரி திமுகவினர் யாரும் நெருங்க முடியாது. காற்றை போல் உருவமின்றி ஓ.எம்.ஜி.குழு ஸ்டாலினின் வளர்ச்சிக்கு திட்டங்களை வகுத்து தந்தது. எதுவாக இருந்தாலும் சித்தரஞ்சன் சாலையில் மட்டும் முடிவெடுக்கப்படும்.
மறைமுக நெருக்கம்
ஒரு கட்டத்தில் சுனிலை பிடித்தால் காரியம் சாதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்த திமுக நிர்வாகிகள் சுனிலுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினர். இதனால் ஸ்டாலின் அளித்த சுதந்திரத்தை மிகுந்த அட்வாண்டேஜாக அவர் எடுத்துக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.
மறுப்பு
இந்நிலையில் சுனில் மீண்டும் ஸ்டாலின் குழுவில் இணைந்து செயல்படுவார் என்று ஒரு சிலரும், அதற்கான வாய்ப்பே இல்லை என அறிவாலய வட்டாரத்தினரும் ஆருடங்கள் கூறுகின்றனர். இதனிடையே சுனில் அதிமுக முகாமுக்கு பணியாற்ற செல்வாரா என விசாரித்ததில் அது போன்ற எண்ணம் சுனிலுக்கு துளியும் இல்லை என மறுத்தார் அவருடன் பழகிய ஒருவர்.