அக்.21-ம் தேதி கொங்கு மண்டல நிர்வாகிகளை நேரில் சந்திக்கிறார் ஸ்டாலின்... துரைமுருகன் அறிவிப்பு..!
சென்னை: கடந்த 6 மாதங்களாக காணொலி மூலம் திமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வந்த ஸ்டாலின், அக்டோபர் 21-ம் தேதியன்று கொங்கு மண்டல நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசுகிறார்.
இது குறித்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
அக்டோபர் 21-ம் தேதி அதாவது அடுத்த புதன்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டத்தில் திமுக வளர்ச்சிப் பணிகள் பற்றி ஸ்டாலின் நேரில் விவாதிப்பார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை திமுக சற்று வீக்காக உள்ளதால் வரும் தேர்தலில் இந்த மண்டலம் மீது அதீத கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ஸ்டாலின். அதிமுகவின் வாக்குவங்கியை திமுகவுக்கு ஈர்ப்பது குறித்து அக்டோபர் 21-ம் தேதி கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.
ஹைதராபாத்தில் மருத்துவமனைக்குள் புகுந்த பேய் வெள்ளம்.. சென்னை 2015-ஐ கண் முன் நிறுத்தும் சோகம்
இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து ஸ்டாலின் பேசவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது.