ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் முதல்வர் இரட்டை வேடம்... கே.என்.நேரு பாய்ச்சல்
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளுக்கு ஒரு புறம் ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டே மற்றொருபுறம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போட்டுள்ளதாக திமுக விமர்சித்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் தொடர்பாக திமுக மீது முதல்வர் அபாண்டமான பொய்யை கூறியுள்ளதாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அபாண்ட பொய்
காவிரி டெல்டா பகுதியில் பல்வேறு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்க இன்றுவரை துணிச்சல் இல்லாத முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி, எங்கள் கழகத் தலைவர் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்தார் என்று அபாண்டமாக- அப்பட்டமான பொய் பேசுவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அராஜகம்
"நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து" "கதிராமங்கலத்தில் போராடிய விவசாயிகளைக் கைது செய்து" " நெடுவாசல் போராட்டத்திற்காக சேலத்து மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தை ஏவி விட்டு""விவசாயிகளுக்காகப் போராடிய பேராசிரியர் ஜெயராமனை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்து"விவசாயிகளின் மீது அடக்குமுறையையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட்ட முதலமைச்சருக்கு எங்கள் கழகத் தலைவர் பற்றிக் குறை கூற எந்த யோக்கியதையும் இல்லை.
அரசுக்கு கேள்வி
அதிமுக அரசுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதில் உடன்பாடு இல்லை என்றால் இதுவரை "ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதிக்காதீர்கள்" என்று எந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்காவது முதலமைச்சர் உத்தரவு போட்டிருக்கிறாரா? தைரியம் இருந்தால் அப்படி போட்ட உத்தரவை அவரால் வெளியிட முடியுமா?
விருப்பத்திற்கு
மத்திய பா.ஜ.க. அரசு - தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு - தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்ட பிறகு, "ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம்"என்றும், "கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியே பெற வேண்டியதில்லை"என மத்திய பா.ஜ.க. அரசு கூறிவிட்ட நிலையில், "நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம்" என்றும் முதலமைச்சர் பேசியிருப்பது ஏமாற்று வேலை.
கடன் தள்ளுபடி
துயரப்படும் விவசாயிகளின் கடன்களைக் கூடத் தள்ளுபடி செய்ய மனமின்றி - "கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்"என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிக் கொண்டிருக்கும் முதலமைச்சர், காவிரி டெல்டா விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவது போல் ஒரு கபட நாடகத்தை இன்று அரங்கேற்றியிருக்கிறார்.இப்போது அளித்துள்ள வாக்குறுதியை - மத்திய பா.ஜ.க. அரசுக்கு அஞ்சி பின்வாங்கி விடாமல் வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.