விவசாயிகளுக்கு என்ன நன்மை செய்துவிட்டீர்... முதல்வருக்கு கே.என்.நேரு சரமாரி கேள்வி
சென்னை: நானும் விவசாயி நானும் விவசாயி என்று தேய்ந்த ரெக்கார்டை போல் முதல்வர் கூறுவதாகவும், இதுவரை விவசாயிகளுக்கு அவர் என்ன நன்மை செய்துவிட்டார் எனவும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், உண்மையை சொன்னால் முதல்வருக்கு கோபம் வருவதாகவும், விவசாயி என்ற வேஷத்தை முதல்வர் கைவிட வேண்டும் எனவும் நேரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திமுகவில் மாஸ் காட்டும் ராஜகண்ணப்பன்... பரபரக்கும் சிவகங்கை மாவட்ட அரசியல்
கண்டனம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஊழல்களை மறைப்பதற்காக 'நானும் ஒரு விவசாயி' என்று தினமும் புலம்பி வருகிறார். பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு நடிக்கிறார். தமிழ்நாட்டு விவசாயத்தைச் சிதைக்கும் ஏராளமான திட்டங்களுக்கு பச்சைக் கொடி காட்டி வரவேற்பு கொடுத்து வந்த பழனிச்சாமி, பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு தன்னை விவசாயியாக காட்டிக் கொள்வது பச்சைத் துரோகம் என்று மதுரையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
கொச்சைப்படுத்தவில்லை
விவசாயி என்றால் நகத்தில் மண் இருக்க வேண்டும்' என்று பேரறிஞர் அண்ணா சொன்னதைக் குறிப்பிட்டார். உடனே பழனிசாமிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. சேலத்தில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியவர் ''மு.க.ஸ்டாலின் விவசாயிகளை கொச்சைப்படுத்திவிட்டார்'' என்று பேசி இருக்கிறார். மு.க.ஸ்டாலின் விவசாயிகளைக் கொச்சைப்படுத்தி பேசவில்லை. நானும் விவசாயிதான் என்று எடப்பாடி சொல்லிக் கொள்வதன் மூலமாக விவசாயிகளை அவர் கொச்சைப்படுத்தக் கூடாது என்பது தான் அவரது குற்றச்சாட்டு.
ஏன்? ஏன்? ஏன்?
உயர்நீதிமன்றமே உத்தரவிட்டும் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி வெயிலிலும் மழையிலும் உழைக்கும் விவசாயிகளுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். எட்டு வழிச் சாலைக்காக விவசாயிகளின் விளை நிலங்களை பறித்து - சேலத்தில் விவசாயிகள் மீது தடியடி நடத்தி- இரவோடு இரவாக பிடித்து சிறையில் தள்ளியது யார்?
குற்றச்சாட்டு
ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதித்து - காவிரி டெல்டாவை பாலை வனமாக்க மத்திய பா.ஜ.க. அரசுடன் துணை நின்று - இப்போது விவசாயிகளை ஏமாற்ற 'பல் இல்லாத ஒரு சட்டத்தை' கொண்டு வந்து நாடகம் போடுவது யார்? விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்களை அமைத்து- விவசாயிகளின் வேளாண் நிலத்தை சிதைத்து சின்னாபின்னப்படுத்தியது யார்? - எல்லாமே சாட்சாத் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான்.
வேஷம்
குடிமராமத்து பணி உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் செய்வதற்கு கையெழுத்துப் போட்டதால் அவரது கையில் ஊழல் கறை தான் இருக்கிறதே தவிர, நிலத்து மண் இல்லை. தன்னை இவர் விவசாயி என்று சொல்லிக் கொள்வதன் மூலமாக உண்மையான விவசாயிகள் தலைகவிழ்கிறார்கள். ஏற்கனவே விவசாயிகளின் வாழ்க்கை நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறது. அதில் இவரது பேச்சு மட்டுமல்ல, விவசாயி வேஷமும் அறுவறுப்பாக இருக்கிறது. இந்த கபட வேடங்களை விட்டுவிடுங்கள்.