காலிக் குடம் இங்கே.. குடிக்கும் தண்ணீர் எங்கே.. தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!
Recommended Video
சென்னை: குடிநீர் பிரச்சினையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு- பகல் பாராமல் தண்ணீரை தேடி அலைகின்றனர். சிறிது சிறிதாக வரும் ஊற்று நீரை பிடிப்பதிலும் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அந்தந்த தொகுதிகளுக்கு திமுகவினர் தண்ணீர் கொடுத்து உதவுமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதன்படி திமுக பிரமுகர்களும் லாரி மூலம் தண்ணீரை விநியோகம் செய்தனர். ஆனால் அமைச்சர் எஸ் பி வேலுமணியோ தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையே இல்லை என கூறினார்.
இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பொதுமக்களை திரட்டி இன்று முதல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு திமுக வேண்டுகோள் விடுத்திருந்தது. தண்ணீர் பிரச்சினையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் காலிக் குடங்களுடன் அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை வில்லிவாக்கத்தில் எம்பி தயாநிதி மாறன், சேகர் பாபு, ஜாபர்கான்பேட்டையில் மா சுப்பிரமணியன், திருச்சியில் கே என் நேரு, திருவண்ணாமலையில் எ.வ.வேலு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.