கொடநாடு வீடியோ: முதல்வர் மீது நடவடிக்கை கோரி ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்.. திமுகவினர் கைது
சென்னை: கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளைக்கும் மர்ம மரணங்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் பரபரப்பு வீடியோவை வெளியிட்டார்.
மேலும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மனோஜும் சயானும் கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்குமாறு கூறியது முதல்வர்தான் என பரபரப்பு பேட்டி அளித்தனர். இதை முதல்வர் பழனிச்சாமி மறுத்தார். மேலும் தன்னை அரசியலில் எதிர்கொள்ள முடியாமல் கோழைத்தனமாக இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளை அவிழ்த்து விடுகின்றனர் என்றார்.
சிபிஐ விசாரணை
இந்நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக மனு கொடுத்தது. இதன் மீது ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி 24-ஆம் ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
பங்கேற்பு
அதன்படி இன்று ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. மு.க.தமிழரசு, மா. சுப்பிரமணியன், ஜெ அன்பழகன், சேகர் பாபு, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சட்டப்படி நடவடிக்கை
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும். கொடநாடு கொள்ளை விவகாரத்தில் முதல்வர் மீது ஆளுநர் அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கைகள்
முதல்வர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும். முதல்வருக்கு எதிராக ஸ்டாலின் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.