கொடநாடு.. எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரி 24-இல் திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: கொடநாடு கொள்ளை விவகாரத்தில் வரும் 24ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளைக்கும் மர்ம மரணங்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் பரபரப்பு வீடியோவை வெளியிட்டார்.
மேலும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மனோஜும் சயானும் கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்குமாறு கூறியது முதல்வர்தான் என பரபரப்பு பேட்டி அளித்தனர். இதை முதல்வர் பழனிச்சாமி மறுத்தார். மேலும் தன்னை அரசியலில் எதிர்கொள்ள முடியாமல் கோழைத்தனமாக இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளை அவிழ்த்து விடுகின்றனர் என்றார்.
இந்நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக மனு கொடுத்தது. இதைத் தொடர்ந்து கொடநாடு கொள்ளை விவகாரத்தில் வரும் 24ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கக் கோரி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடநாடு கொள்ளை விவகாரத்தில் முதல்வர் மீது ஆளுநர் அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், சேகர் பாபு, சுதர்சனம், மா.சுப்ரமணியம் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெறவுள்ளது என்றார் ஸ்டாலின்.