காஷ்மீர்.. தனி ஒருவனாக திமுக மட்டும் போராடுவது ஏன்?
சென்னை: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளை காட்டிலும் திமுக அதிக முனைப்போடு செயல்படுவது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, அரசியல் கட்சித்தலைவர்களை வீட்டுச்சிறையில் வைத்திருப்பது ஆகியவற்றைக் கண்டித்து தலைநகர் டெல்லியில் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து திமுக போராட்டம் நடத்துகிறது.
இந்தப் போராட்டத்தைப் பற்றி பாகிஸ்தான் ஊடகங்களில், குறிப்பாக பாகிஸ்தான் ரேடியோவில் இந்தியாவின் மூன்றாவது பெரியகட்சி திமுக என்றும், அந்தக் கட்சி காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக இந்தியாவில் தொடர்ந்து போர்க்குரல் எழுப்புவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி தீர்த்த திமுகவினர், இந்திராகாந்தி காலத்தில் கொண்டு வரப்பட்ட மிசா கருணாநிதியை இந்திய அளவில் கொண்டுசேர்த்தது.
தற்போது மோடி காலத்தில் காஷ்மீர் விவகாரம் தங்கள் தலைவர் ஸ்டாலினை உலக அளவில் கொண்டு சேர்த்துள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே முல்லைப்பெரியாறு , கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக டெல்லியில் இதுவரை திமுக ஆர்ப்பாட்டமோ,போராட்டம் நடத்தவில்லை எனவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக திமுகவின் செயல்பாடு உள்ளதாகவும் பதிலுக்கு பாஜகவினர் கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.
இப்படி சமூக வலைத்தளங்களில் மாறி மாறி கருத்துப்போர் நடக்கும் சூழலில், காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே தங்கள் போராட்டத்தின் (single agenda) ஒற்றை நோக்கம் என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் விமர்சகர்கள், திமுகவின் போராட்டக்குணம் இன்னும் தொய்வடையவில்லை என்பதை மோடிக்கும், அமித்ஷாவுக்கும் உணர்த்தவே காஷ்மீர் விவகாரத்தில் ஸ்டாலின் விடாப்பிடியாக நின்று குரல்கொடுக்கிறார் எனக் கூறுகின்றனர். மொத்தத்தில் ஆளாளுக்கு தங்களது இருப்பை உணர்த்தவே போராட்டங்களை தொடர்ந்து மேற்கொள்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.