மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக போராட்டம்... கறுப்புச் சட்டை அணிந்து ஸ்டாலின் கண்டன முழக்கம்
சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார். கறுப்புச் சட்டை அணிந்து கைகளில் பதாகைகள் ஏந்தி மின் கட்டண உயர்வுக்கு எதிராக அவர் முழக்கம் எழுப்பினார்.
''குழப்பாதே..குழப்பாதே.. மின் கட்டண ரீடிங்கில் மக்களை குழப்பாதே'' என்பன உள்ளிட்ட முழக்கங்கள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.
ஏற்கனவே செலுத்திய தொகை அதிகமாக இருப்பின், வரும் மின் கணக்கீட்டில் சரி செய்யப்படும்.. தங்கமணி
கண்டனப் போராட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரவர் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மனிதச்சங்கிலி வடிவில் ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
மு.க.ஸ்டாலின் முழக்கம்
''வேண்டும், வேண்டும், மின் கட்டணத்தில் சலுகை வேண்டும்...'' என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பிய ஸ்டாலின், கேரளா, மத்தியப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் போது தமிழகத்தில் மட்டும் அது முடியாதது ஏன் என கேள்வி எழுப்பினார். மின் கட்டணம் ரீடிங் எடுக்கப்பட்டதில் குழப்பமும், குளறுபடியும் நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், ஷாக் அடிப்பது மின்சாரமா? மின் கட்டணமா? என்ற கேள்வியை தாங்கிய பதாகையை உயர்த்திப் பிடித்த வண்ணம் ஸ்டாலின் நின்றார்.
கனிமொழி எம்.பி.
திமுக இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலினும், சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கனிமொழி எம்.பி.யும் போராட்டம் நடத்தினர். மின் கட்டணத்தை பார்த்து தமிழகத்தில் அதிர்ச்சி அடையாத குடும்பமே கிடையாது என்றும் மக்களின் குரலாக திமுக ஒலிக்கிறது எனவும் கனிமொழி எம்.பி. கூறினார்.
திமுக முன்னணியினர்
இதேபோல் தமிழகம் முழுவதும் கிராமங்கள் வாரியாக திமுகவினர் மின் கட்டண உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். திருச்சியில் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் தலைமையில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மின் கட்டண உயர்வை கண்டித்து தனது வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே திருவாரூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தடையை மீறியும் போராட்டம் நடைபெற்றது.