டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கும் திமுக.. 5ம் தேதி போராட்டம்
சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் வரும் 5ம் தேதி திமுக போராட்டம் நடத்தும் என மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாயம் தொடர்பான சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
டெல்லியைச் சுற்றியிருக்கும் பல முக்கிய சாலைகள் வழியாக லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள். மேலும் பல்வேறு சாலைகளை முடக்கி போராட்டத் நடத்தி வருகிறார்கள்.
4 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களுடன் டெல்லியின் தேசிய நெடுஞ்சாலைகளில் அமர்ந்து போராடும் விவசாயிகள் முடிவு தெரியாமல் போக மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வரும் நிலையில்அதற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, டிசம்பர் 5 ஆம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.