மாதம் ஒரு குறி.. வரிசையாக சிக்கிய 6 மாஜிக்கள்.. அதிரடி ரெய்டுகள்... அடுத்தது யார்?
சென்னை: அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். இவருடன் சேர்த்து இதுவரை 6 முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடந்துள்ளது.
இந்த வரிசையில் கே.பி. அன்பழகன் 6-வது நபராவர். ஆட்சிக்கு வந்தவுடன் முறைகேடுகளில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது.
கே.பி அன்பழகன்: சிக்கிய 6வது மாஜி.. என்னாது 11.32 கோடி ரூபாயா.. அதிகாலையிலேயே 57 இடத்தில் ஐடி ரெய்டு
முதலில் சிக்கியது எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அதனை தற்போது திமுக செவ்வனே செய்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடந்து கொண்டிருக்கிறது. அதாவது கடந்த கால ஆட்சியில் ஊழல் லஞ்சம், மற்றும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகார்களில் தொடந்து சிக்கி வருகின்றனர். இதில் முதலில் கிக்கியது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை
குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 20 இடங்களிலும், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது வீடு என மொத்தம் 21 இடங்களில் 21 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது. சோதனையின் முடிவில் சென்னையில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து எந்த பொருளும், ஆவணங்களும் கைப்பற்றபடவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்து சென்றனர்.
2-வது எஸ்.பி வேலுமணி
இதனை தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. எ.ஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை, கோவை என பல இடங்களில் சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை நடந்தது. சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள், கணினிகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்கள். முன்னதாக எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
3-வது சிக்கியது கே.சி.வீரமணி
அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் 4 இடங்கள், வேலூர், திருவண்ணாமலை உள்பட 28 இடங்களில் சோதனை நடந்தது. அவரின் சொத்து மதிப்பு 654 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 15ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. சோதனையில் 34 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 1.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், 5 கணினி ஹார்டு டிஸ்க், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைரம், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு வழக்குக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டது
சி.விஜயாஸ்கரும் தப்பவில்லை
அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயாஸ்கர் வீடுகள், அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி 43 இடங்களில் சோதனை நடைபெற்றது. வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியின் வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 2,37,34,458 ரூபாய் பணம், 1.13 கிலோகிராம் தங்க நகைகள், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் கணக்கில் வராத 2,16,37,000 ரூபாய் பணம், சான்று பொருட்களான கைபேசிகள் பல வங்கி பாதுகாப்பு பெட்டகங்ககளின் சாவிகள், கணினிகளின் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அடுத்தது யார்?
தற்போது அதிமுகவின் முன்னாள் முக்கிய அமைச்சரான கே.பி. அன்பழகன் வீட்டிலும் சோதனை நடந்து வரும் நிலையில் திமுக விரித்த வலையில் இதுவரை 6 மாஜிக்கல் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்சியில் மூத்தவர்கள் என்பதால், மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால் அடுத்து சிக்கபோவது யார்? என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது.