மகாசிவராத்திரி நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிடும் திமுக - பரபர பின்னணி
நல்ல நாள் பார்த்து நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். திமுகவும் நல்ல நாள் பார்த்துதான் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.
சென்னை: தேர்தலின் கதாநாயகனான தேர்தல் அறிக்கையை திமுக மார்ச் 11ஆம் தேதி மகாசிவராத்திரி நாளில் மக்களுக்கு அறிமுகம் செய்யப் போகிறது. இந்த தேர்தல் கதாநாயகன் மக்களை கவர்ந்தால் மட்டுமே அவை வாக்குகளாக மாறும். தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அறிவிப்புகள், வாக்குறுதிகள் சமானிய மக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குகுறுதிகள் பெண்களையும், முதல்முதலாக வாக்களிக்கப் போகும் இளைய தலைமுறையினரையும் கவரும் அம்சங்கள் இடம் பெற்றிருந்தால் போதும் பாதி வெற்றி கிடைத்தது போலத்தான்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்க உள்ளது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய முக்கிய அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.
பல தேர்தல்களில் கட்சிகளின் வெற்றி தோல்வியை தேர்தல் அறிக்கைகள் நிர்ணயம் செய்துள்ளன. தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்வு எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளும் மக்களை கவரும் வகையில் இருந்தால்தான் அவை வாக்குகளாக மாறும் என்பதை அரசியல் கட்சியினர் அறிந்துள்ளனர்.
மு.க ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள தேர்தல் அறிக்கை 2006ஆம் ஆண்டு கருணாநிதி கூறியதைப் போலவே தற்போதைய 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும்; தமிழக மக்களின் மனங்களைக் கவரும். திமுக சட்டசபைத் தேர்தல் அறிக்கையை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்போவதாக கூறியுள்ளார் மு.க ஸ்டாலின்.
தேர்தல் கதாநாயகன்
கடந்த 2006ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் ரேசன் அரிசி ஒரு கிலோ 2 ரூபாய் வழங்கப்படும். சமையல் எரிவாயு கடன்கள் ரத்து, இலவச கலர் டிவி, ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம், விவசாயக்கடன் தள்ளுபடி, கிராமங்களில் இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு முட்டை, முதியோர் ஓய்வூதியம் 400 ரூபாயாக உயர்வு, மகப்பேறு உதவி நிதியாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
திமுக தேர்தல் அறிக்கையில் இலவச கல்வி
இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்ற முனைப்போடு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது திமுக. தேர்தல் அறிக்கையை மார்ச் 11ஆம் தேதியன்று வெளியிட உள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் இலவச அறிவிப்பும் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலவச கல்வி, பெண் குழந்தைகளுக்கு கல்வியில் சலுகையும் உதவித்திட்டம் வழங்கப்பட உள்ளது. திருமண உதவித்தொகை இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது. வேலை வாய்ப்புக்கான திட்டங்கள், மருத்துவப்படிப்பு, பொறியியல் படிப்பு இலவசம் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதரவற்றோர் உதவித் தொகை ரூ. 2000
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்களுக்கு தற்போது உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த உதவித்தொகையை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும் என திமுக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித் தொகையாக மாதம் 2000 ரூபாய் வழங்கும் திட்டமும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்ல நாளில் நல்ல அறிவிப்பு
மார்ச் 11ஆம் தேதி மகாசிவராத்திரி நாளாகும். இந்த நாளில் தொடங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. திமுகவில் உள்ள தலைவர்கள், நிர்வாகிகளுக்கு இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் எந்த ஒரு செயலையும் நல்லநாள் பார்த்தே தொடங்குகின்றனர். சஷ்டி திதியில்தான் விருப்பமனு பெறத் தொடங்கியது திமுக. சங்கடஹர சதுர்த்தி நாளில் வேட்பாளர் நேர்காணலை தொடங்கியது. மகாசிவராத்திரி நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. இந்த தேர்தல் கதாநாயகன் மக்களை கவர்ந்தால் மட்டுமே அவை வாக்குகளாக மாறும் என்பது நிச்சயம்.