அதிமுகவின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்போம்... திமுக செயற்குழுவில் தீர்மானம்
Recommended Video
சென்னை: அதிமுகவின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்க வேண்டும் என திமுக செயற்குழு அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திமுக செயற்குழு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்களின் விவரம் பின்வருமாறு;
மக்களுக்கு நன்றி
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மகத்தான ஆதரவினையும் - மாபெரும் வெற்றியையும் வழங்கிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இந்த செயற்குழு கூட்டம் தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி
உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முழுவதையும் மதித்து - மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலையும், அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலையும் உடனடியாக நடத்திட வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
NPR, NRC
கேரள அரசு குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சூழ்நிலையிலும் கூட, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் (NPR), தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (NRC) கண்மூடித்தனமாக அ.தி.மு.க. அரசு ஆதரவு அளித்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் துயரத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளாக்கும் பா.ஜ.க.வின் செயலுக்கு உள்நோக்கத்துடன் துணை போவது மன்னிக்க முடியாத மாபாதகம் என்று இந்த செயற்குழு, அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது.
வஞ்சக நாடகம்
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய குடியுரிமை சட்டத்தில் இடமில்லை என்று மத்திய பா.ஜ.க. அரசு உயர்நீதிமன்றத்திலேயே கூறிவிட்ட நிலையில், "இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம்" என்று இலங்கைத் தமிழர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசுக்கு இந்த செயற்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியக் குடியுரிமை
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு. அதை நிறைவேற்ற தொடர்ந்து மத்திய அரசை கழகம் வலியுறுத்தி வருகிறது. அதிமுக அரசு, இரட்டைக் குடியுரிமை பற்றிப் பேசும் தமது இரட்டை நாக்குப் போக்கைக் கைவிட்டு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தோல்விகள்
அ.தி.மு.க. அரசின் அடிமைத்தனத்தால் தமிழக உரிமைகள் எல்லாம் பறிபோவதுடன் - நிதி, நிர்வாகம் அனைத்திலும் தேக்க நிலைமை உருவாகி - ஒட்டுமொத்த மாநிலமே வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் ஸ்தம்பித்துத் தள்ளாடுகிறது. எனவே, அதிமுக அரசின் முகமூடியை, மக்கள் மன்றத்தில் தோலுரித்து, அதன் மோசடி சொரூபத்தை ஊரெங்கும் உணர்த்திட இந்தச் செயற்குழு சபதம் ஏற்கிறது.