எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
அமைச்சர் ஜெயக்குமார் குறித்து ஆர்எஸ் பாரதி பேசியுள்ளார்
சென்னை: இப்பதான் எல்லாம் கூடி வருகிறது.. மறுபடியும் ஆர்எஸ் பாரதியால் ஏதாவது கூட்டணிக்குள் பிரச்சனை வந்துவிடுமோ தெரியவில்லை.
ராயபுரம் சட்டமன்ற தொகுதியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து வடசென்னை மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கலந்து கொண்டார்.. மேலும் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ ஆர்டி சேகரும் கலந்து கொண்டனர்.
அப்போது ஆர்எஸ் பாரதி பேசும்போது, "அமைச்சர் ஜெயக்குமார் இன்று அமைச்சராக இருக்கிறார் என்றால் அதுக்கு திமுகதான் காரணம்... அவருடைய அப்பாவை கவுன்சிலர் ஆக்கியதே திமுக தான்.. இந்த ராயபுரத்தில் திமுக எம்எல்ஏக்கள் இல்லாதது மக்களின் தவறு அல்ல... இந்த திமுகவின் தவறுதான்.. அதுக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன். ஏனென்றால், கடந்த 2 தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு சீட் கொடுத்து பெரிய தப்பு செய்துட்டோம்.. இந்த முறை திமுகதான் ராயபுரத்தில் போட்டியிடும்.. கூட்டணி ஒதுக்கீடு குறித்து நான்தான் பேசுவேன்.. நிச்சயமாக இந்த தொகுதி திமுகவிற்குதான்" என்றார்.
கடந்த வாரம் முழுவதும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக புதுச்சேரியில் பெருத்த புயல் அடித்தது.. அந்த புயல் இப்போதுதான் கொஞ்சம் ஓய்ந்து இருக்கிறது.. வரும் தேர்தலில் காங்கிரசுடன் இணைந்தே தேர்தலை சந்திக்கும் என்று திமுகவும் சொல்லி உள்ள நிலையில் ஆர்எஸ் பாரதி, இப்படி பேசி உள்ளார்..
"என்னதான் சொந்த கட்சி மீது உரிமை, அக்கறை இருந்தாலும், கூட்டணி ஒதுக்கீடு குறித்து நான்தான் பேசுவேன் என்றும், ராயபுரத்தில் காங்கிரசுக்கு சீட் தந்திருக்க கூடாது என்றும் பகிரங்கமாக பாரதி சொல்லி இருக்க கூடாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.. அதேசமயம், காங்கிரஸ் மீது எந்த உள்நோக்கத்துடனும் பாரதி இவ்வாறு பேசவில்லை, ஜெயக்குமாரை தோற்கடிக்கும் நோக்கிலேயே ஆர்.எஸ்.பாரதி அப்படி பேசியிருக்கிறார் என்றும் ஆதரவு கருத்துக்கள் எழுகின்றன.