மகுடம் சூட்டிய திமுக- கொள்கை போராளியாக இணைந்து.. பொதுச்செயலாளராக உயர்ந்த துரைமுருகன்
சென்னை: திமுகவின் 4-வது பொதுச்செயலாளராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் துரைமுருகன். திமுகவில் பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் என முதுபெரும் தலைவர்கள் அமர்ந்த பொதுச்செயலர் நாற்காலியில் அமருகிறார் துரைமுருகன்.
"எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல துரைமுருகன்.
அண்ணாவின் திராவிட நாடு கொள்கை பார்த்து ஒரு போராளியாக 1953ம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன்.
நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இருவண்ண கொடியை பிடித்துக் கொண்டு கழகத்திற்காக கோஷமிட்டே இருப்பவன்.
ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்.. இப்படி சொன்னவர்தான் துரைமுருகன்.
இன்றைய திமுகவில் இருக்கும் மூத்த முன்னோடிகளில் முதன்மையானவர் துரைமுருகன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செல்லப்பிள்ளை. இதுதான் இன்றைய திமுகவினர் அறிந்த துரைமுருகனின் வரலாறு.
அண்ணா காலத்தில் திமுகவில் இணைந்தவர் துரைமுருகன். திமுகவில் எம்ஜிஆர் இருந்த போது அவருக்கும் செல்லப்பிள்ளையாக- ஒரு வளர்ப்புப் பிள்ளையாகவே வளர்க்கப்பட்டவர் துரைமுருகன். எம்ஜிஆர் படிக்க வைத்து ஆளாக்கியவர்தான் துரைமுருகன். அவரது திருமணத்துக்கு அன்றே 20 பவுன் சங்கிலி அணிவித்து தனது தந்தை ஸ்தானத்தை நிலைநிறுத்தியவர் எம்ஜிஆர்.
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர் பாலு- நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
காலத்தின் கோலத்தில் எம்ஜிஆர், திமுகவில் இருந்து வெளியேற நேரிட்டது. அப்போது எம்ஜிஆருடன் எண்ணற்ற திமுகவின் தளபதிமார்கள் அணிதிரண்டனர். ஆனால் எம்ஜிஆரின் படைவரிசையில் சேர மறுத்தார் துரைமுருகன். தாம் கொண்டதும் கண்டதுமான தலைவராக அண்ணாவையும் கருணாநிதியையும் ஏற்றுக் கொண்டவர் துரைமுருகன்.
எத்தனையோ முறை எம்ஜிஆரிடம் இருந்து அழைப்பு வந்தபோதும் என் தலைவர் கருணாநிதியிடம் இருந்து வரமாட்டேன் என்று தம்மை ஆளாக்கிய எம்ஜிஆருக்கு பதிலடி கொடுத்தவர் துரைமுருகன்.
அத்துடன் நிற்காமல் சட்டசபையில் எம்ஜிஆர் அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இடி,மின்னல், மழைகளில் ஒருவர். துரைமுருகன், ரகுமான்கான், சுப்பு.. இந்த மூவரும்தான் அந்த இடி, மின்னல், மழை என்பதை தமிழகத்தின் அரசியல் வரலாற்று பக்கங்கள் எழுதிவைத்திருக்கிறது.
"அவங்களுக்கு முன்னாடி.. நான்லாம் சாதாரணமான ஆளு.. பயமா இருக்குங்க".. அதிர வைத்த துரைமுருகன்
இதனால்தான் துரைமுருகன் மீது அளவற்ற பிரியத்தை கருணாநிதி எப்போதும் வைத்திருந்தார். திமுக ஆட்சி என்றாலே பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்தான் என்கிற நிலையை தமது அறிவாற்றலால் நிலைநிறுத்திக் கொண்டவர் துரைமுருகன்.
தமிழகத்தின் நதிநீர் பிரச்சனைகளை விரல் நுனியில் வைத்திருப்பவர்.. எந்த கோப்புகளுமே இல்லாமல் அக்குவேறாக ஆணிவேராக சட்டசபையில் நதிநீர் பிரச்சனைகளை துரைமுருகன் பேசுவதை கேட்டால் மெய்சிலிர்த்துப் போகும். இதுவரை 11 சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்ட துரைமுருகன் 1984 மற்றும் 1991-ல் மட்டும் தோல்வியைத் தழுவினார்.
முரசொலி மாறன், கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தார். அவருக்குப் பின் அந்த வெற்றிடத்தை நிரப்பக் கூடியவராக துரைமுருகன் வலம்வந்தார். எள்ளலும் நக்கலுமான துரைமுருகனின் பேச்சு சுவாராசியமானதாகவே எப்போதும் இருக்கும். சட்டசபையாக இருந்தாலும் பொதுக் கூட்டமாக இருந்தாலும் பத்திரிகையாளர் சந்திப்பாக இருந்தாலும் கலகலப்புக்கு கிஞ்சித்தும் குறைவில்லாமல் வைத்துக் கொள்வார் துரைமுருகன்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு.. போட்டியின்றி தேர்வாகிறார்கள்!
திமுகவின் பொருளாளர் பதவியை ஸ்டாலினிடம் இருந்து 2018-ல் பெற்றார் துரைமுருகன். பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் மறைந்தபோதே அக்கட்சியின் மரபுப்படி மூத்தவரான துரைமுருகனுக்குத்தான் அந்த பதவி என கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பொருளாளர் பதவியை துரைமுருகனும் ராஜினாமா செய்தார்.
ஆனால் கொரோனா தாக்கத்தால் பொதுச்செயலாளர் பதவியும் கிடைக்காமல் பொருளாளர் பதவியிலும் இல்லாமல் தவித்துப் போனார் துரைமுருகன் என்றே செய்திகள் வந்தன. ஒதுங்கிப் போகிறார்.. கட்சியைவிட்டே தாவப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் ரெக்கை கட்டிப் பறந்தன. அண்மையில் கூட கட்சி மாறுகிறார் துரைமுருகன் என தலைப்புச் செய்திகள் வந்த போது துரைமுருகன் வெளியிட்ட அறிகையில் சொன்னதுதான், அண்ணாவின் திராவிட நாடு கொள்கை பார்த்து ஒரு போராளியாக 1953ம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன் என்பது.
கொள்கைப் போராளியாக, கடைக்கோடி தொண்டனாக திமுகவுக்குள் நுழைந்து, ஏற்றுக் கொண்ட தலைமைக்கு முழு விசுவாசியாக வாழ்நாள் எல்லாம் வாழ்ந்த மூத்த உடன்பிறப்புக்கு பொதுச்செயலாளர் பதவி என்கிற மகுடத்தை சூட்டி இருக்கிறது திமுக!