இதென்னடா திமுகவுக்கு வந்த சோதனை.. பிரசாந்த் கிஷோரை அழைத்ததால் புதிய குடைச்சல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோரை திமுக அழைத்தது போதும்.. திரும்பிய திசையெல்லாம் விமர்சனங்கள் என திமுக படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
திமுகவில் கருணாநிதி ஆரோக்கியத்துடன் செல்வாக்கு செலுத்திய காலத்தில் முன்னணி நிர்வாகிகள், மூத்த தலைவர்களை அரவணைத்து ஆலோசித்து அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்படுவது வழக்கம். ஆனால் திமுகவில் ஸ்டாலின் தரப்பு தலையெடுக்க தொடங்கியதில் இருந்தே எல்லாமும் தலைகீழ்தான்.
சொந்த கட்சி நிர்வாகிகளை ஆலோசித்து முடிவெடுக்கும் போக்கு மாறிப் போய் சொந்தக்காரர்கள் சொல்வதே வேதவாக்கு என மாற்றிக் கொண்டது திமுக தலைமை. இதனடிப்படையில்தான் திமுகவில் உள்ளே நுழைந்தது ஓஎம்ஜி குரூப்.
ஸ்டாலின் பிரசாரம்
இன்றைய பிரசாந்த் கிஷோரிடம் பணிபுரிந்து வந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் இந்த ஓஎம்ஜி குரூப். இவர்கள்தான் ஸ்டாலினின் நமக்கு நாமே உள்ளிட்ட பிரசார வியூகங்களை வகுத்துக் கொடுத்தனர். ஊடகங்களில் எப்போதும் வந்தபடியே இருக்க வேண்டும் என்கிற சூத்திரத்தின் அடிப்படையில்தான் இந்த ஓஎம்ஜி குரூப் இயங்கி வந்தது.
திமுக- பிகே கூட்டணி
இந்த நிலையில்தான் பிரசாந்த் கிஷோரின் புகழ் வெளிச்சம் திமுகவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பிரசாந்த் கிஷோரைப் பொறுத்தவரையில் ஜெயிக்கிற குதிரையில் சவாரி செய்வதில் ஆர்வம் உள்ளவர். அதனால் தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இருக்கக் கூடிய திமுகவுக்கு கிரீன் சிக்னல் காட்டினர்.
திமுக மீது விமர்சனம்
இதில் கடுப்பாகிப் போன ஓஎம்ஜி குரூப்பின் சுனில் உள்ளிட்ட சிலர் ஒதுங்கிக் கொண்டனர். இதனையடுத்து பிரசாந்த் கிஷோரின் வருகையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாகவே அறிவித்தார். இன்றளவும் பிரசாந்த் கிஷோரை திமுக பயன்படுத்துவது சர்ச்சையாகி வருகிறது. இதற்கு திமுக தலைவர்கள் தொடர்ந்தும் விளக்கம் தந்தும் வருகின்றனர்.
பிகே மீது கோபம்
இந்நிலையில்தான் திமுகவிடம் இருந்து வெளியேறிய ஓஎம்ஜி குரூப் தலைமை நிர்வாகி, பிரசாந்த் கிஷோர் மீது ரொம்பவே குமுறலுடன் இருக்கிறாராம். அவரது இலக்கு பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதுதானாம். இதற்காக அதிமுகவிடமும் ரஜினிகாந்திடம் அந்த தலைமை நிர்வாகி பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தார். ஆனாலும் கைகொடுக்கவில்லை.
புலம்பும் திமுக
இதையடுத்து தமக்கு உதவியாக இருந்த ஒரு குழுவை திமுகவுக்குள் ஊடுருவ வைக்கவும் அந்த மாஜி தலைமை நிர்வாகி முயற்சித்திருக்கிறார். அதுவும் கைகூடவில்லை. பிரசாந்த் கிஷோரை வீழ்த்த திமுகவை தோற்க வைக்க வேண்டும்; இதற்காக யார் யார் சிக்குவார்கள் என தூண்டிலுடன் காத்திருக்கிறாராம் அந்த மாஜி நிர்வாகி. இருப்பினும் எங்கே தமது பெயர் வெளியே வந்துவிடுமோ என்பதற்காக காவிரிதேசத்தில் தாம் இருப்பதாகவும் காட்டிக் கொண்டிருக்கிறாராம் அவர். இதை கேள்விபட்ட நிலையில், நமக்குத்தான் இப்படியெல்லாம் குடைச்சல் வருகிறதே என புலம்புகிறதாம் திமுக தலைமை.