ஹேப்பி.. திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. திருமாவளவன் உற்சாகம்
Recommended Video
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருப்பது உறுதியாகி விட்டது. இன்று இரு கட்சி தலைவர்கள் இடையே நடந்த தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது மக்கள் நல கூட்டணி என்ற பெயரில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் தனியாக கூட்டணி அமைத்துக் கொண்டனர். இவர்கள் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை.
இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, லோக்சபா தேர்தலில், திமுக கூட்டணியில் இணைவதற்கு மறைமுகமாக விருப்பம் தெரிவித்து வந்தது. ஆனால் திமுக தலைமை இதுவரை அந்தக் கட்சியை கூட்டணிக்கு அழைக்காமல் இருந்தது. பாமக தங்கள் பக்கம் வரலாம் என்பதால் திமுக யோசித்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுக அழைப்பு விடுத்தது. இன்று மதியம் 12.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடு குழு, திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி குழுவும், துரைமுருகன் தலைமையில் திமுக குழுவும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் நிருபர்களிடம், திருமாவளவன் கூறியதாவது: தொகுதிப் பட்டியலை திமுக குழுவிடம் வழங்கியுள்ளோம். மீண்டும் கலந்துரையாடி தொகுதிகளை முடிவு செய்வோம். திமுக குழுவுடன் நடந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. எத்தனை இடங்கள் கேட்டுள்ளோம் என்பது பின்னர் தெரிவிக்கப்படும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஒருமுறை மட்டுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். தற்போது தனி சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிட்டு வருகிறோம். வரும் லோக்சபா தேர்தலிலும் தனி சின்னத்திலேயே போட்டியிடுவோம். விஜயகாந்த்தை சந்தித்து உடல் நலம் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.