திமுக மேல் விழுந்த இமேஜ் மாறும்போது இது தேவையா.. சர்ச்சையாகும் சென்னை மேற்கு திமுக மா.செ. பேரணி!
சென்னை: திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி என்பது, கிட்டத்தட்ட அமைச்சர் பதவிக்கு ஈடானதாக பார்க்கப்படுகிறது. கட்சியால் பிரிக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு மாவட்டத்திற்கான முழு பொறுப்புமே மாவட்டச் செயலாளர் வசம்தான் இருக்கும்.
தேர்தல் நேரத்தில், யாருக்கு போட்டியிட டிக்கெட் கொடுக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, அந்த மாவட்டத்தில், யாருக்கு புரமோஷன், யாரை கட்சியை விட்டு தூக்க வேண்டும் என்பது வரையில் முக்கிய முடிவுகளின்போது, கட்சி தலைமைக்கு, மாவட்டச் செயலாளர்கள் கொடுக்கும் 'இன்புட்தான்' முக்கிய பங்காற்றும் என்பதால், அந்தந்த மாவட்டங்களில், திமுகவிலுள்ள அடிமட்டத் தொண்டன் முதல் எம்எல்ஏ, எம்பிக்கள் வரை மாவட்டச் செயலாளரிடம் நட்போ நட்பு பாராட்டுவார்கள்.
அதிமுகவிலும் மாவட்டச் செயலாளர்கள் பதவி உண்டு என்றாலும், ஜெயலலிதா காலம் வரை, அவர் எடுப்பதுதான் முடிவு. எனவே, திமுகவை போல அனைத்து அதிகாரமும் கொண்ட அதிகார மையமாக அதிமுக மாவட்டச் செயலாளர்களால் மாறமுடியாது. திமுகவில், இப்படி அதிகமாக குவிந்து கிடக்கும் அதிகாரமே, சில நேரங்களில் மக்களின் கோபத்தையும் சம்பாதித்துள்ளது.
ஏழைகளுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் புதிய கல்வி கொள்கை- கனிமொழி
விமர்சனங்கள்
குறு நில மன்னர்களை போல செயல்படுகிறார்கள், அதிகார தோரணை அளவுக்கு மீறி போகிறது என்பதெல்லாம், கடந்த தேர்தலின்போது திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலர் மீது வைக்கப்பட்ட விமர்சனம். திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல், அதிமுக, மறுபடியும் ஆட்சி பீடத்தில் ஏற, இதுபோன்ற மாவட்டச் செயலாளர்கள் மீதான மக்களின் அதிருப்தியும் காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துகள் தெரிவித்தனர்.
லோக்சபா தேர்தலில் ஆதரவு
இப்படியான சூழ்நிலையில்தான், கருணாநிதி மறைவுக்கு பிறகு, இப்போது, திமுக லகான் மு.க.ஸ்டாலினிடம் வந்துள்ளது. அவர் இன்றைய தலைமுறைக்கு ஏற்ப கட்சி கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டுவர முயற்சி செய்கிறார். அதன் பலனாகத்தான், கடந்த லோக்சபா தேர்தலின்போது, தேனி தவிர்த்து பிற அனைத்து தொகுதிகளிலும் மக்கள் திமுகவை வெற்றிபெறச் செய்தனர்.
ஸ்டாலினின் எளிமை
நமக்கு நாமே என்ற பெயரில் ஸ்டாலின் எளிமையாக மக்களோடு மக்களுடன் பழகியது உள்ளிட்டவற்றால் திமுக மீது இருந்த, அதிகார தோரணை என்ற அபிப்ராயம் பலருக்கும் குறையத் தொடங்கியது. இதுவும் லோக்சபா வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இந்த நிலையில்தான், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிற்றரசு ஆதரவாளர்கள் நடத்திய ஆடம்பர அணிவகுப்பு சமூக வலைத்தளங்களில் மக்களிடையே அதிருப்தியை சம்பாதித்துள்ளது.
ஜெ.அன்பழகன் மறைவு
திமுக எம்எல்ஏவும், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த எம்எல்ஏ ஜெ. அன்பழகன், கொரோனா பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அம்மாவட்டச் செயலாளராக நே.சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளார். ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
உதயநிதி
ஆயிரம் விளக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும் தலைமை நிலைய செயலாளருமான கு.க.செல்வம், மாணவரணியின் மாநில துணைச் செயலாளர் மோகன், அண்ணாநகர் பகுதி செயலாளர் பரமசிவம், அண்ணா நகர் எம்.எல்.ஏ. மோகன் ஆகியோரிடையே இந்த பதவியை பெறுவதில் போட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சிற்றரசு இப்பதவியை பெற்றுள்ளார். இவர் சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்தவர். எனவே, உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல பழக்கம் இருந்தது. இவரது கட்சிப் பணிகளால் உதயநிதி மகிழ்ச்சியடைந்திருந்த நிலையில் சிற்றரசுக்கு சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தது.
|
பிரமாண்ட வரவேற்பு
இந்த நிலையில்தான், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊருக்கு சென்ற சிற்றரசுக்கு, பிரமாண்ட வரவேற்பு கொடுத்துள்ளனர் அவர் ஆதரவாளர்கள். எஸ்யூவி வகை கார் ஒன்றில் சிற்றரசு செல்ல, முன்னே இரு சக்கர வாகனங்களில் தொண்டர்கள் அணி வகுக்க, காருக்கு பின்னால் பல கார்களில் பிற தொண்டர்கள் அணி வகுக்க, ஏதோ முதல்வரின் கான்வாய் போல இந்த பேரணி அமைந்திருந்தது. ஊருக்குள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் வேறு. ஆனால், இதில், பங்கேற்ற தொண்டர்களில் முக்கால்வாசி பேர், முகக் கவசம் அணியவில்லை. கூட்டம் காரணமாக சமூக இடைவெளியும் கிடையாது. இதை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
|
ஆடம்பரம் இல்லாத ஸ்டாலின்
திமுகவுக்காக உழைத்த ஒருவர் இறந்தபிறகு அந்த இடத்திற்கு சிற்றரசு பதவிக்கு வந்துள்ளார். எனவே இதில் கொண்டாட்டம் எதற்கு. கருணாநிதி மறைவுக்கு பிறகு, திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, அதை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றுதான் கூறியிருந்தார். இவ்வாறு தெரிவிக்கிறார் இந்த நெட்டிசன்.