மன்மோகன்சிங், வைகோ, என்.ஆர். இளங்கோ...திமுகவின் ராஜ்யசபா எம்.பி. லிஸ்ட்!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மதிமுக பொதுச்செயலர் வைகோ, மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோரை எம்.பிக்களாக திமுக தேர்வு செய்ய உள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. கனிமொழி லோக்சபா தேர்தலில் வென்று எம்.பி.யாகிவிட்டார். மேலும் திருச்சி சிவா, அதிமுகவின் மைத்ரேயன் உட்பட மொத்தம் 5 பேரின்பதவிக் காலமும் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது.
ஆகையால் இந்த 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு மொத்தம் 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. 2016 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் அதிமுக 136 எம்.எல்.ஏக்களையும் திமுக 98 எம்.எல்.ஏக்களையும் வைத்திருந்தது.
சரிவில் அதிமுக
இந்த கணக்கின் படி அதிமுக 3, திமுக 2 ராஜ்யசபா எம்.பிக்களை எளிதில் தேர்வு செய்யும் நிலை இருந்து. 6-வது எம்.பி இடம் இழுபறியில் இருந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் 2 எம்.எல்.ஏக்கள் மறைவு என அடுத்தடுத்த சரிவுகளால் அதிமுகவின் பலம் 114 என குறைந்தது.
திமுகவின் 3 எம்.பிக்கள்
தற்போது இடைத்தேர்தல்கள் வெற்றி மூலம் திமுக கூட்டணியின் பலம் 110- ஆக அதிகரித்துள்ளது. இதனால் திமுக எளிதாக 3 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த 3 இடங்களில் ஒன்று மதிமுகவுக்கு என ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டது.
மீண்டும் வைகோ
அந்த ஒரு இடத்துக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோதான் போட்டியிடுவார் என கூறப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் அனுபவம் மிக்க வைகோ மீண்டும் டெல்லி செல்வது திராவிட கட்சியினரிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மன்மோகன்சிங்குக்கு வாய்ப்பு
மற்றொரு இடத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்காக காங்கிரஸ் கோரியுள்ளதாம். இது தொடர்பாக அறிவாலய வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, மன்மோகன்சிங்குக்கு ஒரு இடத்தைக் கொடுப்பது என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. தற்போதைய சூழலில் அது மன்மோகன்சிங்குக்குத்தான் என்கிற நிலை இருக்கிறது என கூறுகின்றன.
எம்.பியாகும் இளங்கோ
3-வது ராஜ்யசபா எம்.பி.க்கு பலரது பெயர்களும் அடிபடுகின்றன. இதில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவுக்கே அதிக வாய்ப்புகள் என்கின்றன திமுக வட்டாரங்கள். திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை கருணாநிதி ராஜ்யசபா எம்.பி.யாக்கினார். அவரது பாணியிலேயே சண்முகசுந்தரத்துக்கு இணையான என்.ஆர், இளங்கோவுக்கு ஸ்டாலின் ராஜ்யசபா சீட் தருவார் என கூறப்படுகிறது.
இன்னொரு முயற்சி
மேலும் என்.ஆர். இளங்கோவுக்கு அடுத்ததாக தேமுதிகவில் இருந்து வந்த கான்ஸ்டான்டைன் ரவீந்தரன் அப்பதவிக்கு முயற்சிக்கிறாரம். குறிப்பாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்கிற லாபியின் அடிப்படையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதாம். இயல்பாகவே என்.ஆர். இளங்கோவுக்குத்தான் 3-வது ராஜ்யசபா சீட் செல்ல வேண்டும் என்கின்றனர் திமுக மூத்த நிர்வாகிகள்.