கடைசி வரை.. விஜய் சேதுபதி பட விவகாரத்தில் வாயே திறக்கலையே திமுக.. ஏன்?
சென்னை: முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு எழுந்தபோது திமுக கனத்த மவுனத்தை காட்டியது புரியாத புதிராகவே உள்ளது.
2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இறுதி யுத்தம் நடந்தது. இந்த யுத்த காலத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆனால் 2009-ம் ஆண்டுதான் தமக்கு மகிழ்ச்சியான நாள் என கூறியவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன். இலங்கை அரசியலில், போர்க்குற்றவாளியாக தமிழ் மக்களால் குற்றம்சாட்டப்படும் மகிந்த ராஜபக்சேவின் படுதீவிர ஆதரவாளர் முரளிதரன்.
இதனால் எதிர்ப்பு!
இதனால் முத்தையா முரளிதரன் வாழ்க்கை குறித்த வரலாற்றுப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. உலகத் தமிழர் அமைப்புகள், விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிக்கவே கூடாது என வலியுறுத்தினர். யாழ்ப்பாணத்தில் ஈழத் தமிழர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி கோரிக்கை விடுத்தனர்.
கட்சிகள், இயக்கங்கள் எதிர்ப்பு
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் விஜய் சேதுபதி முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றனர். பல்வேறு இயக்கங்களும் விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தனர். தமிழர்களுக்கு எதிராக கருத்தை தெரிவித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமாரும் கூட கூறியிருந்தார்.
மவுனமாக இருந்த திமுக
இத்தனை களேபரங்கள் நடந்த போதும் திமுக தரப்பில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் திமுக எப்போதும் வரலாற்று காலமாக முன்னணி பாத்திரத்தை வகித்தது உண்டு. ஆனால் இப்போது எந்த ஒரு காரணமுமே இல்லாமல் கனத்த மவுனம் காத்தது திமுக. சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக ஈழப் பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாட்டை மாற்ற முயற்சிக்கும் போக்குகள் அதிகரித்திருக்கின்றன.
இப்படியா பம்முவது?
திமுகவை விமர்சிப்பவர்கள் ஈழத் தமிழ் தீவிர ஆதரவாளர்கள் என்கிற ஒற்றை காரணத்தை முன்வைத்து இப்படியான ஒரு விபரீதப் போக்கை இன்றைய இளம்தலைமுறை முன்னெடுக்க முனைகிறது. இதுபோன்ற முக்கிய பிரச்சனைக்குரிய காலங்களில் திமுக தலைமையும் பம்மி பதுங்குவது எந்த விதத்திலும் நியாயமில்லையே என்பது திராவிடர் ஆதரவாளர்களின் உணர்வு.