புதுபார்முலா.. கூட்டணி கட்சிகளின் தொகுதி, சின்னத்துடன் வேட்பாளர்களையும் பரிந்துரை செய்யுமாம் திமுக
சென்னை: திமுக கூட்டணியில் இம்முறை பிற கட்சிகளின் தொகுதிகள், சின்னங்கள் ஆகியவற்றை மட்டுமின்றி வேட்பாளர்களையும்கூட திமுக தலைமைதான் பரிந்துரை செய்யும் என புதிய பார்முலா கடைபிடிக்கப்படுமாம்.
சட்டசபை தேர்தலில் வலிமையான கூட்டணியை தக்க வைப்பதில் திமுக கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. இதற்காக கூட்டணியில் இதுவரை இல்லாத விட்டுக் கொடுப்புகள், நெகிழ்வுத் தன்மைகளை ஏற்றுக் கொள்ளவும் கட்சிகள் தயாராக இருக்கின்றனவாம்.
உதயசூரியனால் சலசலப்பு
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்தியது. ஆனால் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இருகட்சிகளும் தனிச்சின்னத்தில்தான் போட்டி என அறிவித்தன.
ஸ்டாலின் சமாதான அறிக்கை
இதேபோல் திமுக 200 இடங்களுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடும்; எஞ்சியவைதான் கூட்டணிகளுக்கு என்கிற தகவலும் வெளியானது. இதுவும் அந்த கூட்டணியில் சலசலப்பை கிளப்பியது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு அத்தனை கட்சிகளையும் சமாதானப்படுத்தினார்.
சலசலப்பால் புது பார்முலா
இதனையடுத்து ஒதுக்கப்படும் தொகுதிகளில் பாதி இடங்களில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்கிற புதிய பார்முலாவை திமுக முன்வைத்துள்ளது. இது தொடர்பாக கட்சிகளுக்குள் பேசித்தான் முடிவு எடுக்கப்படும் என திமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் உங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இவைதான்.. இங்கே மட்டும் போட்டியிடுங்கள் எனவும் திமுக தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.
கூட்டணிகளின் வேட்பாளர்கள்
இந்த பரிந்துரையோடு இன்னொன்றையும் திமுக தலைமை கூட்டணி கட்சிகளிடம் சொல்லியிருக்கிறதாம். இந்த தொகுதியில் இன்னாரை வேட்பாளரை நிறுத்தினால் பிரச்சனை இல்லாமல் ஜெயிக்க முடியும். ஆகையால் அவரையே வேட்பாளராகவும் அறிவிக்க வேண்டும் என கூட்டணி கட்சிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்திருக்கிறதாம் திமுக தலைமை.
நம்பிக்கையில் திமுக
அதாவது கூட்டணி கட்சிகளின் போட்டியிடும் தொகுதி, சின்னம், வேட்பாளர் அத்தனையையும் இம்முறை திமுகவே தீர்மானிக்குமாம். திமுகவின் இந்த புதிய அணுகுமுறை சரிப்பட்டு வருமா? ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஆலோசிக்கின்றனவாம். இந்த புதிய பார்முலாவில் அத்தனை கட்சிகளுக்குமே ஆதாயம் என்பதால் ஏற்றுக்கொள்வார்கள் என நம்பிக்கையோடு இருக்கிறதாம் திமுக தலைமை.