திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா காங்.? வரவேற்க போவது தினகரன்? கமல்ஹாசன்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்குமா? இல்லையா? என்பது பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. அப்படி திமுக அணியைவிட்டு காங்கிரஸ் வெளியேறினால் மக்கள் நீதி மய்யத்துடன் கை கோர்க்குமா? தினகரனின் அமமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுமா? என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொடக்கம் முதலே 20 அல்லது அதற்கு மேல் கூடுதலாக ஒன்றிரண்டு தொகுதிகள் என்ற நிலை கடைபிடிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியோ 40 தொகுதிகள் கேட்டு நின்றது.
திமுகவுடன் மேலிட தலைவர்களான உம்மன் சாண்டி, தினேஷ் குண்டுராவ் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையிலும் கூட திமுக கறார் நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியது. இது காங்கிரஸை கடும் அதிருப்தி அடைய வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின.
சென்னை, கோவையில் உருவானது உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51!
இனி மேலிட தலைவர்கள் இல்லை
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, இனி பேச்சுவார்த்தைக்கு டெல்லி மேலிட தலைவர்கள் வரமாட்டார்கள் என பதிவு செய்தார். தற்போதைய நிலையில் காங்கிரஸுக்கு 18 முதல் 22 வரையிலான தொகுதிகள்தான் திமுக தரும் என கூறப்படுகிறது.
பொதுவாக பேசும் ராகுல்
இன்னொரு பக்கம் தமிழகத்தில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, பொத்தாம் பொதுவாக பாஜக, பிரதமர் மோடி எதிர்ப்பு, அதிமுக பற்றி பேசுகிறார். அதற்கு சமமாக திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றெல்லாம் பேசுவதில்லை. மக்களுக்கு நல்லது செய்பவர்கள்தான் முதல்வராக வேண்டும் என பொத்தாம் பொதுவான கருத்தையே ராகுல் காந்தி முன்வைக்கிறார்.
காங். இறுக்கம்
ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கும் ராகுல் காந்தியிடம், திமுக கூட்டணி, ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் ஆகியவை தொடர்பான வார்த்தைகளை கேட்டுப் பெறுவதற்கு பத்திரிகையாளர்கள் போராட வேண்டியது இல்லை. இப்படி ஒரு இறுக்கமான நிலையில் இருக்கும் காங்கிரஸ், ஒருவேளை திமுக அணியைவிட்டு வெளியேறவும் முடிவு செய்திருக்கிறதா? என்கிற கேள்வி எழாமல் இல்லை.
மநீம அல்லது தினகரன்
அப்படி திமுக அணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் அந்த கட்சிக்கு இருக்கும் 2 வாய்ப்புகள் 1) மக்கள் நீதி மய்யத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைவது 2) அமமுக தலைமையிலான கூட்டணியில் இணைவது. இந்த இரு அணிகளில் இணைந்தால்தான் காங்கிரஸ் விரும்புகிற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடியும். தமிழக தேர்தல் வரலாற்றில் கடைசி நேரங்களில் கூட்டணிகள் தலைகீழாக மாறிய வரலாறுகளும் உண்டு.
பூடகமாக சொன்ன தினகரன்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம், காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. இதனை தினகரன் மறுக்கவில்லை. அதேநேரத்தில் எந்த கட்சிகளுடன் பேசுகிறோம்? என வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தைகளை கட்சி அலுவலகத்தில்தான் பேச வேண்டும் என்பதும் இல்லை என பூடகமாகவே பதில் கூறியிருந்தார். இதனால் திமுக அணியில் காங்கிரஸ் நீடிக்குமா? இல்லை வெளியேறுமா? என்கிற நிலைதான் தற்போது உள்ளது.