உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயார்... திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயார் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அக்கார்டு ஹோட்டலில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
- மூன்று வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஜனநாயகக் கருத்தாக்கத்தைப் படுகொலை செய்திருப்பதற்கு; மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
- அரசியல் சட்டப் பிரிவு 9-ன்படி, 17.10.2016 மற்றும் 19.10.2016 அன்று நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு, தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருப்பதற்கு மாநிலத் தேர்தல் ஆணையமும், அதிமுக அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
- மூன்றாண்டுகளுக்கு முன்பு கழகம் தொடுத்த வழக்கில் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து 31.12.2016-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி, தமிழகத் தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்த முன்வரவில்லை.
தீர்மானங்கள்
- அ.தி.மு.க. அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் உள்நோக்கத்துடன் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்கப் போட்ட சதித்திட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, அ.தி.மு.க. அரசின் முகமூடியை சட்டப் போராட்டத்தின் மூலம் கிழித்தெறிந்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்தக் கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
- உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக ரீதியில் - நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள "பொன்னான வழிகாட்டுதல்கள்" என இக்கூட்டம் வரவேற்கிறது.
- மேலும், மூன்று வருடங்களுக்கும் மேலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது எனவும், உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைத்து - தி.மு.க. மீது "போலி குற்றச்சாட்டினை" முன்வைத்து பொய்ப் பிரச்சாரம் செய்யும் அ.தி.மு.க. அரசுக்குத் தக்க பாடம் கற்பித்துள்ள தீர்ப்பு எனவும், இந்தக் கூட்டம் கருதுகிறது.
தீர்மானங்கள்
- உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்திடும் வகையில், நேற்று (7.12.2019), சட்டத்திற்குப் புறம்பாக, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அலட்சியமான நடவடிக்கைக்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
- உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றைச் சட்ட நெறிமுறைகளை அனுசரித்து முழுமையாகச் செய்து முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கருத்தை ஒரு மனதாக ஏற்றுக் கொள்வது என்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
- " மக்கள் குரலே மகேசன் குரல்; மக்கள் என்றும் நம் பக்கமே " என்ற மகத்தான நம்பிக்கையுடன், தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட தி.மு.கழகம் தயாராக இருக்கிறது என்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
Comments
English summary
dmk says, ready to contest local body elections
Story first published: Sunday, December 8, 2019, 19:58 [IST]