நீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 1500 அரிசி மூட்டைகள்.. அனுப்பி வைத்தார் ஸ்டாலின்
சென்னை: நீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1500 அரிசி மூட்டைகளை திமுக தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது.
தொடர்ந்து கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழைக்கு 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு திமுக சார்பில் உதவி செய்யப்படுகிறது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1500 அரிசி மூட்டைகளை திமுக தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
அப்போது திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் த.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
அதனை தொடர்ந்து திமுக மேற்கு மாவட்டம் மயிலை பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஏழுமலை ஏற்பாட்டில் 100 மூட்டை அரிசி அனுப்பப்பட்டது. அந்த வாகனத்தையும் திமுக தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
கஜா புயலின் போதும் திமுக சார்பில் லாரிகள் மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.