அந்த 15 பேர் போதாதா? அடுத்தது புகழேந்தியா? அழகிரி சொன்னதுதானே நடக்குது.. திமுகவில் திகில் குரல்
Recommended Video
சென்னை: அமமுகவைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி திமுகவுக்கு தாவக் கூடும் என்கிற தகவல்களை அக்கட்சியினரே ரசிக்கவில்லையாம். இப்படியே போனால் அமைச்சர் ஜெயக்குமார் சொன்னது போல தினகரனும் கூட திமுகவுக்கு வந்துவிடுவாரோ என திகிலடித்து போயுள்ளனர் அக்கட்சி உடன்பிறப்புகள்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு முக்கிய பிரமுகர்கள் தாவுவது நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் காலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன், நாஞ்சிலார் என விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான் வந்தனர்.
திமுக நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வேண்டாம்..! மு.க.ஸ்டாலின் கறார் உத்தரவு
திமுகவை ஆக்கிரமித்த அதிமுக
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் புற்றீசல்போல திமுகவுக்குள் அதிமுக பெருந்தலைகள் ஆக்கிரமிப்பு அதிகமாகிவிட்டது. அதிமுகவில் இருந்து விலகி நடிகர் பாக்கியராஜ் கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளராக இருந்த இன்றைய திமுகவின் முகமான எ.வ.வேலு தொடங்கி பெருங்கூட்டமே திமுகவில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
பட்டியலை பாருங்க சார்
அதாவது எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சேடப்பட்டி முத்தையா. ரகுபதி, செல்வகணபதி. அனிதா ராதாகிருஷ்ணன் , முத்துசாமி, ஜெகத்ரட்சகன், கருப்பசாமி பாண்டியன்,, கேபி ராமலிங்கம், சேகர்பாபு, பழ.கருப்பையா, செந்தில் பாலாஜி, கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் என 15 பேர் திமுகவில் பெருந்தலைகளாக வலம் வருகின்றனர்.
கொந்தளிக்கும் திமுக நிர்வாகிகள்
இந்த வரிசையில் பெங்களூரு புகழேந்தியும் விரைவில் இணைவார் என கூறப்படுகிறது. தற்போது இந்த 15 பேர் பட்டியலை முன்வைத்துதான் அடுத்தது புகழேந்தியுமா? என திகலடித்து போய் கிடக்கின்றனர் திமுகவினர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நேற்றுவரை நம்மை எதிர்த்து அரசியல் செய்துவிட்டு இன்று அவர்களுக்கே நாம் வேலை செய்வது என்கிற போக்கு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர் திமுக நிர்வாகிகள்.
பலித்தது அழகிரி ஆருடம்
ஏற்கனவே அதிமுகவில் இருந்து வருவோர் எண்ணிக்கையை குறிப்பிட்டு திமுகவின் பெயரையே மாற்றிவிடுங்க..என குமுறியிருந்தார் மு.க. அழகிரி. இப்போது அவரு சொன்னதுதானே அப்படியே நடக்கிறது என்றும் சுட்டிக் காட்டுகின்றனர் திமுகவினர்.