ஜெ. பாணியில் திமுகவை மாற்ற பிகே திட்டமா? நூதனக் கொள்கையால் தலைவர்களிடையே ஏமாற்றம்
சென்னை: திமுகவுக்கு இனி கொள்கை கோட்பாடுகள் பேசுகிற, உட்கட்சி ஜனநாயகம் பேசுகிற மாபெரும் இயக்கம் என்ற அடையாளம் தேவை இல்லை; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி அதிமுகவை தீவிர விசுவாசிகளால் மட்டுமே நடத்தினாரோ அதே பாணியில் நடத்தினால்தான் சரிப்பட்டு வரும் என்கிற முடிவோடு களம் இறங்கி வேலை செய்து வருகிறதாம் பிரஷாந்த் கிஷோரின் டீம். இது திமுக மூத்த தலைவர்கள் பலரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.
Recommended Video
திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவி விவகாரத்தில் ஆ. ராசாவின் நிலைப்பாடு தொடர்பாக நாம் நேற்று நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனைத் தொடர்ந்து நம்மை தொடர்பு கொண்டு பேசிய திமுக மூத்த தலைவர்கள் பலரும் கட்சியின் தற்போதைய நிலைமையை குமுறிக் கொட்டிவிட்டனர்.
திமுகவுக்கு என அடையாளமாக இருப்பதில் முக்கியமான பங்கு வகிப்பது திராவிடர் இயக்க கொள்கை நீட்சி; உட்கட்சி ஜனநாயகம் ஆகியவைதான். திமுகவில் தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை பொதுக்குழுவில் செயற்குழுவில் குறைந்தபட்சம் பேசுவதற்கு வாய்ப்புகளாவது கிடைக்கும். கருணாநிதி காலத்தில் இத்தகைய விமர்சனங்கள் பெரியதாக மனக்குறையாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. மாறாக அதுகுறித்து விவாதிக்கப்பட்டு சுமூக தீர்வுகள் காணப்பட்டும் இருக்கிறது.
திமுக பாணியை கையிலெடுக்கும் அதிமுக... வழக்கறிஞர் அணியை வலுவாக கட்டமைக்க திட்டம்
கருணாநிதிக்குப் பின் திமுக
கருணாநிதிக்குப் பிந்தைய திமுகவின் தற்போதைய நிலைமை வேறு ஒரு முகமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. நாங்களும் இயங்குகிறோம் என்பதை எப்படியாவது விளம்பரப்படுத்தி கொள்ளும் சோ கால்ட் ஆக்டிவ் பாலிட்டிக்ஸ், தாங்கள் சொல்வதை மட்டுமே தலையாட்டிக் கொண்டு செய்யக் கூடிய ரொம்பவே ஆக்டிவ் விசுவாசிகளை எதிர்பார்க்கும் தலைமை.. இவைதான் தற்போதைக்கு திமுகவுக்கு தேவையோ? என்கிற வகையில் போக்கு இருக்கிறதாக கூறப்படுகிறது.
அதிகாரமே இலக்கு
மேலும் கொள்கை, கோட்பாடுகள் எல்லாம் இப்போதைய அரசியல் சூழலுக்கு பொருத்தமானதாக இருக்காது; நேரத்துக்கு ஏற்ப சமரசங்களை செய்து கொண்டு அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது மட்டும்தான் ஒரே இலக்காக இருக்க வேண்டும் என்கிற பாதையை கட்சி தேர்ந்தெடுத்துவிட்டதோ? என்கிற சந்தேகமும் இருக்கிறது. இதனடிப்படையில்தான் திமுகவுக்காக பிரஷாந்த் கிஷோர் களமிறக்கப்பட்டார். அவரும் கொள்கை கோட்பாடுகள் பேசாத ஒரு சராசரியான அதிகாரத்தை கைப்பற்றும் அரசியல் கட்சி என்கிற அஜெண்டாவை வலுப்படுத்தும் வகையிலான வேலைகளை முன்னெடுத்து வருகிறார்.
சீனியர்களுக்கு சிக்கல்
முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் திமுகவில் தலைமையை துணிச்சலுடன் விமர்சித்து கருத்துகளை முன்வைக்கக் கூடியவர்கள், கருணாநிதியுடன் சமமாக உரையாடியவர்கள், கருணாநிதிக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் யார் யார் என்கிற ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாம். தென்தமிழகத்தில் குமரியில் தொடங்கி விபி ராஜன், கே.எஸ். ராதாகிருஷ்ணன், மதுரை பொன். முத்துராமலிங்கம், திண்டுக்கல் ஐ பெரியசாமி, திருச்சி கே.என் நேரு, நாமக்கல் காந்திசெல்வன் என கருணாநிதி காலத்து 2-ம் கட்ட தலைவர்கள் பலரது பெயரும் இந்த ஒதுக்கப்பட வேண்டியவர் பட்டியலில் இருக்கிறதாம். இவர்களை ஒதுக்குவது முதல் வேலையாம்.
இவர்கள்தான் புதிய தளபதிகள்
சரி திமுகவில் இவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு யாரை முன்னிலைப்படுத்தலாம் என்கிற ஒரு பட்டியலையும் திமுக தலைமைக்கு கொடுத்திருக்கிறதாம் பிகே டீம். அதில் இடம்பிடித்தவர்கள் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், சேகர்பாபு, செந்தில் பாலாஜி, ராஜ கண்ணப்பன் போன்றவர்கள்தான். இவர்கள்தான் தலைமை என்ன சொன்னாலும் சரி என்பதை மட்டும் சொல்லிவிட்டு செயல்படக் கூடியவர்கள். இவர்களைப் போன்றவர்கள்தான் இனி திமுகவுக்கு தேவை என பரிந்துரைத்துள்ளதாம் பிகே குரூப்.
திமுக சீனியர்கள் குமுறல்
எ.வ.வேலு வகையறாக்களை மட்டுமே பிகே டீம் பரிந்துரைக்க இன்னொரு காரணமும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது ஓட்டுக்குப் பணம்.. நிச்சயம் வந்துவிழும் ஓட்டு.. கிடைக்கும் முதல்வர் நாற்காலி.. இது மட்டுமே திமுக தலைமையில் அஜெண்டாவாக இருக்கிறது. இதை செயல்படுத்தக் கூடிய வல்லமை கருணாநிதியின் சகாக்களைவிட தற்போதைய சகபாடிகளுக்கே அதிகம். கிட்டத்தட்ட ஜெயலலிதா சொல்வதை மட்டுமே செய்யும் தலைவர்களைப் போல திமுகவின் 2வது கட்ட தலைவர்களை மாற்றியமைப்பதே பிகேவின் திட்டம் என்று சொல்கிறார்கள். இதுதான் திமுக சீனியர்களிடையே உள்ளக் குமுறலாக இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை கட்சி கட்டுமானம் அடிப்படையில் நன்றாக இருக்கிறது. இதை சீர்குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் திமுகவின் எதிர்காலத்துக்கு சம்மட்டி அடியாகவே இருந்துவிடும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.