என்னது கொ.ப.செ.வா? திமுகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்த தங்க தமிழ்ச்செல்வன்!
Recommended Video
சென்னை: திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டதால் அக்கட்சியில் பலரும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக திருச்சி சிவா மற்றும் ஆ. ராசா ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்த இருவரும் திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாறு குறித்து பல மணிநேரங்கள் இடைவிடாது வகுப்பு எடுக்கும் வல்லமை கொண்டவர்கள்.
பல்வேறு அறிஞர்களின் நூல்களை கற்றறிந்து சமூக நீதி சித்தாந்தத்தின் அத்தனை முகங்களையும் இந்துத்துவாவின் அத்தனை கோர முகங்களையும் பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றை பாமரர்களுக்கும் எளிதில் புரியும்வகையில் பாடம் எடுக்கும் திறமையாளர்கள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொள்கை பிரசார பீரங்கிகளாக திமுகவினருக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் ராசாவும் சிவாவும்.
இந்த இருவருடன் இப்போது தங்க தமிழ்ச்செல்வனையும் கொள்கை பரப்பு செயலராக நியமித்துள்ளனர். அதிமுக, அமமுகவில் இருந்து வருகின்றவர்களுக்கு ஏதோ ஒரு பதவி, மாவட்ட அளவில் பொறுப்பு கொடுப்பது என்பது தவிர்க்க முடியாததுதான். கருணாநிதி காலத்தில் இருந்து இன்றுவரை திமுகவில் பல முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் அதிமுகவில் இருந்து கட்சி தாவியவர்கள்தான்.
உங்களுக்கு இடமில்லை.. பல லட்சம் பேர் வெளியேற்றப்படும் அபாயம்.. அசாமில் என்ன நடக்கிறது தெரியுமா?
ஆனால் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் போன்ற மிக முக்கிய பதவிகளை அவர்களுக்கு கருணாநிதி ஒருபோதும் தூக்கி தந்தது இல்லை. அதுவும் திராவிட என்கிற பெயரையே வைக்க விரும்பாத கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் தினகரன்.
திராவிட என்கிற பெயரையே ஒவ்வாமையாக கொண்ட அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர்தான் தங்க தமிழ்ச்செல்வன். அப்படி திராவிட ஒவ்வாமை கட்சியின் கொபசெவுக்கு திராவிடர் இயக்கத்தின் அசல் முகமான திமுகவில் கொள்கைபரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் திமுகவினரை மட்டுமல்ல எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிமுக, அமமுகவை போல ஓட்டு அரசியல் கட்சியாக மட்டும்தான் நாங்கள் இனி செயல்படுவோம் என்பதைத்தான் தங்க தமிழ்ச்செல்வனை கொள்கை பரப்புச் செயலாளராக கொண்ட திமுக சொல்கிறதா? என்பதுதான் அக்கட்சியில் கொள்கை கொள்கை என பேசி பேசியே காலத்தை தொலைத்தவர்களின் ரத்தக் கண்ணீருடனான கேள்வி.