விதை இவர்கள் போட்டது.. சமூக நீதிக்காக தொடரும் போராட்டம்.. சட்ட சாட்டையை சுழற்றும் திமுக!
பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு முதல் கட்சியாக திமுக எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்து உள்ளது.
சென்னை: பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு முதல் கட்சியாக திமுக எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்து உள்ளது. இதன் மூலம் சமூக நீதிக்காக போராடும் கட்சி திமுக என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினர் பயன் பெறும் வகையில் 10% சதவிகித பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்தது. ராஜ்ய சபா, லோக் சபா என்று இரண்டு அவைகளிலும் இந்த சட்டம் நிறைவேறியது.
தமிழக கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தது. முக்கியமாக திமுக இதை பெரிய அளவில் எதிர்த்து பேசியது. அதே போல் தற்போது பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கும் தொடுத்து இருக்கிறது.
விதை நாம் போட்டு
திமுகவின் இந்த கோபத்திற்கு ஒரே காரணம் பல்லாண்டுகளாக பல கோடி மக்கள் ஒடுக்கப்பட்டு வேலையிலும், படிப்பிலும் வாய்ப்பு ஏதும் இன்று இருந்தது மட்டும்தான். இந்தியா சுதந்திரம் அடைந்தே போதே திமுக மொழி ரீதியான போராட்டங்களுக்கு இடையில் சாதி ரீதியான இடஒதுக்கீட்டு போராட்டத்திற்கும் குரல் கொடுக்க தொடங்கியது. சாதி ரீதியான இடஒதுக்கீட்டிற்கு முதலில் குரல் கொடுத்தது, திக, நீதிக்கட்சி, திமுக ஆகிய கட்சிகள்தான். இந்த விதை.. இந்தியா முழுக்க விருட்சமாக பரவியது.
அப்போதே போராட்டம்
சமூக நீதிக்காக திமுக, திகவும் 1950லேயே போராடியது. அப்போது வகுப்புவாரி இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்து திராவிட கட்சிகள் போராடியது. அதன் விளைவாக 1951ல் இந்திய சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு வாக்குவாரி இடஒதுக்கீடு உரிமை நிலைநாட்டப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த இடஒதுக்கீடு சட்டத்திருத்தம், அம்பேத்கார் இருக்கும் போதே கொண்டு வரப்பட்டது. இந்த பெரிய மாற்றத்தை அப்போதே கெத்தாக நிகழ்த்திக் காட்டியது திமுகதான்.
49 வரை கொண்டு வந்தவர்
அதேபோல் இந்தியா முழுக்க 50%சதவிகிதம்தான் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று சட்டம் வந்த போதே துணிச்சலாக 50 சதவிகிதம்தானே.. எடுத்துக்கொள்ளுங்கள் 49 சதவிகிதம் என்று அதிரடி சட்டம் கொண்டு வந்தார் முன்னாள் திமுக முதல்வர் கருணாநிதி. 1971 ல் கருணாநிதி இப்படி செய்ததை பார்த்து மற்ற மாநிலங்களிலும் 49 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த விதையையும் திமுகதான் போட்டது.
மண்டல் கமிஷன்
1978 அமைப்பாக்க மண்டல் கமிஷன் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டு 1989ல் விபி சிங் ஆட்சியில்தான் மண்டல் கமிஷன் பரிந்துரை செய்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதன்பின் திமுகவின் சமூக நீதி சட்டங்கள் இன்னும் வேகம் எடுத்தது. இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு, பல மக்கள் பயன்பெற முடிந்தது. தமிழகம் மிக வேகமாக வளர இது முக்கிய காரணமாக அமைத்தது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம்
அதன் பிறகு 1989 ஆம் ஆண்டுகளில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது தமிழகத்தை உலுக்கிய புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர், கள்ளர் சமுதாயம் உட்பட மொத்தம் 108 சமுதாயத்திற்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதனால் பல கோடி இடைநிலை சாதியினர் பலம் அடைந்தனர்.
69 சதவிகிதம்
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 69% ஒதுக்கீடு இருக்கிறது. இப்போதும் கூட 69% என்ற வார்த்தையை கேட்டால் வடமாநிலங்கள் நடுங்கும். பின்தங்கிய வகுப்பினருக்கு 69% இடஒதுக்கீடு, தமிழ் நாட்டில் சாத்தியமானதிற்கு பின் திமுகவின் நெடிய சட்ட போராட்டம் இருக்கிறது. அதை சாத்தியப்படுத்தியதும் திமுகதான். இதனால்தான் கருணாநிதிக்கு சமூக நீதிக்காவலர் என்ற பெயரும் வைக்கப்பட்டது.
பல முறை வழக்கு
ஆனால் இதற்கு எதிராக பல முறை வழக்கு தொடுக்கப்பட்டது. தமிழகத்தில் 69 இடஒதுக்கீடு இருப்பது பெரிய தவறு என்று பலமுறை உயர் சாதியினரால் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், ஒரு முறை... ஒரே ஒரு முறை கூட இந்த சட்டத்தை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. எல்லா முறையும் திமுக சார்பாக நீதிமன்றத்தில் , இதற்கு எதிராக கடுமையான வாதம் வைத்து.. அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.
திமுக கொடுத்த குரல்
அதே போராட்ட குணம்தான் ராஜ்ய சபாவில் திமுக எம்.பி கனிமொழி உருவத்தில் ஒலித்தது. 90% கட்சிகள் இந்த மசோதாவை ஆதரித்த போது தனியாக 10% கோட்டாவிற்கு எதிராக வீறு கொண்டு பொங்கினார். அவரின் பேச்சு இந்தியா முழுக்க வைரலானது. நான் பெரியார் மண்ணின் பெண் என்று கூறி அவையையே அதிர வைத்தார். இது தற்போது வழக்காகவும் நீண்டு இருக்கிறது.
ஒரே கட்சி திமுக
இதோ இப்போது, இந்த 10 சதவிகித கொட்டாவிற்கு எதிராக வழக்கு தொடுத்த ஒரே கட்சி என்ற பெயரை திமுக பெற்று இருக்கிறது. லோக் சபா தேர்தல் நேரத்தில் எந்த அச்சமும் இன்றி திமுக இந்த வழக்கை மிக தைரியமாக தொடுத்து இருக்கிறது. 50 ஆண்டுகாலமாக இடஒதுக்கீட்டிற்கு போராடிவரும் திமுக.. தற்போது புதிய சட்டப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளது!