"நாங்க ஆன்லைன் அரசியல் பண்றோமா.. அப்போ பாஜகவிடம் ஏன் பம்முறீங்க".. அமைச்சருக்கு திமுகவினர் சுளீர்!
கடம்பூர் ராஜுவின் குற்றச்சாட்டுக்கு திமுகவினர் கொந்தளித்துள்ளனர்
சென்னை: "திமுக இப்படி ஆன்லைன் அரசியல் செய்து வருகிறதே.. நீங்க வேணும்னா பாருங்க, தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் ஒரு கட்சிகூட கூட்டணியில் இருக்காது" என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளது திமுகவை செம கடுப்பில் ஆழ்த்தி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "அதிமுக சுயமாக இயங்க கூடியது.. எங்களை இயக்குவதற்கு யாராலும் முடியாது... ஆனால் சுயமாக இயங்க முடியாமல் ஒரு குழுவிடம் ஒப்படைத்து அரசியல் செய்கிறது திமுக.. ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக.. அரசியல் அனுபவம் உள்ள துரைமுருகன் போன்றோர் இதை மனவேதனையுடன் பார்த்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் ஒரு கட்சிக் கூட இருக்காது" என்றார்.
திமுக எம்.எல்.ஏ.மீது நள்ளிரவில் தாக்குதல்.. தூத்துக்குடி யார் கட்டுப்பாட்டில் உள்ளது..? -ஸ்டாலின்
அமைச்சர்
அமைச்சரின் இந்த பேச்சு பல விவாதங்களை கிளப்பி வருகிறது.. இதுகுறித்து திமுக தரப்பினர் சிலரிடம் பேசினோம்.. "சமீபத்தில் திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடந்தது.. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. இப்படி ஒரு வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங், உலக அரசியல் வரலாற்றிலேயே எந்த கட்சியும் இதுவரை நடத்தியது இல்லை. மற்ற கட்சிகளே இதை வாயை பிளந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர்!
ஸ்டாலின்
அதுமட்டுமல்ல, எங்க தளபதி கட்சி பணிகள் குறித்த எல்லா ஆலோசனைகளையும் வீடியோ கான்பரன்ஸ் மூலமே நடத்தி வருகிறார்.. எல்லா குறைகளையும் களைந்து, அனைத்து பணிகளையும் முடுக்கி வருகிறார்.. இப்படி டெக்னிக்கல் ரீதியாக மக்களை கவருவதுதான் அதிமுகவுக்கு கடுப்பை தந்துவிட்டது.
பொறுப்பு
துரைமுருகனை இவர் ஏன் கோர்த்துவிடுகிறார்? அவருக்கு உரிய பொறுப்பை தந்து தலைமை கவுரவித்து வருகிறது.. எல்லாம் சரியாக செல்லும்போது, இவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.. பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின்படி நடப்பதாக தலைமையே பகிரங்கமாக தெரிவித்துவிட்டதே? மற்றவர்கள் எல்லாம் தங்களுக்கு பின்னால் ஒரு டீமை மறைமுகமாக வைத்து கொண்டு ஆலோசனை கேட்டு வருகிறார்கள்.. நாங்கள் ஸ்ட்ரைட்டாகவே ஒளிவுமறைவின்றி சொல்லிவிட்டோம்.
பிரேமலதா
கூட்டணியை பொறுத்தவரை, முதலில் அதிமுகவில் சரி பார்த்து கொள்ளட்டும்.. தனித்து போட்டி என்று பிரேமலதா சொன்னபோது இவர்கள் ஏன் அமைதியாக இருந்தார்கள்? இடஒதுக்கீடு குறித்து லிஸ்ட் கேட்டாரே டாக்டர் ராமதாஸ்.. அப்போது ஏன் அமைதியாக இருந்தார்கள்? பாஜக 60 சீட் கேட்டதே, அதற்கும் ஏன் இதுவரை பதில் சொல்லாமல் இருக்கிறார்கள்? அதிமுக கூட்டணி இப்போதும் அப்படியே தொடர்கிறதா என்ற நிச்சயம் இல்லாத நிலையில், எப்படி திமுக கூட்டணியை பற்றி குறை சொல்லலாம்?" என்று கொந்தளித்து விட்டனர்!