மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... மாணவரணியினர் கைது
Recommended Video
சென்னை: அண்ணா பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் பகவத்கீதை திணிக்கப்படுவதை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழக்ம் முன்பு நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாணவரணி செயலாளருமான எழிலரசன் தலைமை தாங்கினார். 100 பேர் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வார்கள் என காவல்துறை நினைத்த நிலையில், சுமார் 500 பேர் வரை ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் குவிந்தனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கும் சூழல் உருவானது. இதையடுத்து உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வேளச்சேரியில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், ஆர்ப்பாட்டம் நடந்த சாலை வழியே சென்ற பொதுமக்களுக்கு அண்ணா எழுதிய ஆரிய மாயை என்ற நூல் இலவசமாக அளிக்கப்பட்டது.
தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்றும், தமிழ் குறித்த பிரதமரின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மென்மையான முறையில் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்து சென்ற நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது, தொழில்நுட்பக் கல்வியில் பகவத் கீதைக்கு என்ன வேலை என்றும், சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் ஓங்கி குரல் எழுப்பப்பட்டது. புதியக் கல்விக்கொள்கையை கண்டித்தும், மத்திய அரசின் பொதுநிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.