அன்றும்- இன்றும் திமுக எம்பி.. மீண்டும் திரும்பிய 20 ஆண்டு வரலாறு..வைகோவை வைத்து திமுக செம்ம பிளான்
சென்னை: 1978, 1984, 1990 என மூன்று முறை திமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட வைகோ சுமார் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திமுக சார்பிலேயே ராஜ்ய சபா எம்பியாக நாடாளுமன்றம் செல்லப்போகிறார்.
இதன் மூலம் 1990களின் வரலாறு சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி உள்ளதாக மதிமுகவினர் உற்சாகமாக உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்க திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டார். இதன்படி விரைவில் தமிழகத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் மூலம் வைகோ எம்பியாவது உறுதியாகி உள்ளது.
1964இல் அரசியலில் நுழைந்தார்
பேச்சுப்புயலாக போற்றப்படும் வைகோ 1964ம் ஆண்டு அண்ணாவின் முன்னிலையில் இந்தி எதிர்ப்பில் சிறப்பாக பேசி திமுகவில் இணைந்து அரசியலில் நுழைந்தார். அதன் பிறகு மிக இளம் வயதிலேயே (25 வயது) தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியின் ஊராட்சி மன்ற தலைவரானார்.
1990 வரை எம்பி
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது பல நிர்வாகிகள் அதிமுகவில் சேர்ந்த போதும், திமுக தலைவர் கருணாநிதியின் மீதான பற்று காரணமாக செல்லவில்லை. மிகத்துடிப்பாக இருந்த வைகோவை 1978ம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக்கி அழகு பார்த்தார் திமுக தலைவர் கருணாநிதி. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் முதல் முதலாக வைகோ அடியெடுத்து வைத்தார். அடுத்ததாக 1984ம் ஆண்டும், 1990ம் ஆண்டும் திமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஈழத்தமிழர் பிரச்னை
சுமார் 18 ஆண்டுகள் ராஜ்யசபா எம்பியாக சிறப்பாக பணியாற்றி வைகோ, ஈழத்தமிழர் பிரச்னையிலும், இலங்கை தமிழக மீனவர் பிரச்னை குறித்தும் அதிக முறை நாடாளுமனறத்தில் அனல் பறக்க பேசி உள்ளார்.
சிவகாசி தொகுதி எம்பி
இப்படி வெற்றிகரமாக தலைவராக உருவான வைகோ 1993ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேறி மதிமுக என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் சிவகாசி தொகுதியில் இருந்து இரண்டு முறை லோக்சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இப்போது திமுக கூட்டணி சார்பில் வைகோ மீண்டும் ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றம் செல்ல உள்ளார்.
திமுக அதிரடி முடிவு
இதன் மூலம் 20 ஆண்டு வரலாறு மீண்டும் திரும்பி உள்ளது. பல ஆண்டு அரசியல் அனுபம் உள்ள வைகோவுக்கு இன்றைய பெரும் அரசியல் தலைவர்கள் பலருடன் நெருக்கமான நட்பு உண்டு. எனவே தமிழகத்தில் பாஜக அரசு நிறைவேற்ற துடிக்கும் ஹைட்ரோ கார்பன், மீதேன், நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்ற எதிர்க்க வைகோ தான் சரியான ஆள் என முடிவு செய்து திமுக அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. எனவே விரைவில் வைகோவின் முழக்கம் நாடாளுமன்றத்தில் கேட்கும்.