ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 12-ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டம்.. திமுக ஆதரவு
சென்னை: ஜூன் 12-ம் தேதி பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திற்கு, திமுக ஆதரவளிக்கும் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்க கூடிய இத்திட்டத்தை மத்திய அரசு அதை கைவிட வலியுறுத்தியும் ஜூன் 12-ம் தேதி மாலை மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. மேலும் காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கக் கோரியும் இப்போராட்டம் நடைபெற உள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மறைந்த நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட இயக்கமான, பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் மனித சங்கிலி போராட்டத்தை நடத்துகிறது.
பிரம்மாண்ட மனித சங்கிலி போராமட்டத்திற்கான ஏற்பாடுகளை பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் தீவிரமாக செய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் வரை இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.
இதன் மொத்த நீளம் 596 கிலோ மீட்டராகும். கிழக்கு கடற்கரை சாலையில் மனித சங்கலி நடைபெறும். இதில் 3 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அனைத்து விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இப்போராட்டத்திற்காக திமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கேட்கப்பட்டுள்ளது
இந்நிலையில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் 9 மாவட்டங்களிலும், விவசாயிகளுடன் திமுக-வும் இணைந்து பங்கேற்கும் என கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்டெடுக்கவும், விளைநிலங்களை பாதுகாக்கவும் நடைபெறும் இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த மனித சங்கிலி போராட்டம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க நிறுவனர் லெனின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தினால் புதுவை தொடங்கி ராமேஸ்வரம் வரை உள்ள கடற்கரை கிராமங்கள் முற்றிலும் அழிந்துவிடும். சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கும். விளைநிலங்கள் வீணாகும், தமிழகம் பாலைவனமாகும் என எச்சரித்தார்
எனவே தான் தமிழகத்தையும், தமிழக மக்களையும் காக்கும் வகையில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.