இந்திய தொழிற்சங்க மையங்கள் சார்பில் நவ.26-ம் தேதி பந்த்... திமுக ஆதரவு... ஸ்டாலின் அறிவிப்பு..!
சென்னை: இந்திய தொழிற்சங்க மையங்கள் சார்பில் நவம்பர் 26-ம் தேதி நடத்தப்படும் பொதுவேலை நிறுத்தப் போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் நலனில் ஆர்வமும் அக்கறையும் உள்ள அனைத்துக் கட்சிகளும் - அமைப்புகளும் ஒரே அணியில் நிற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தொழிலாளர் விரோதம்
மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் வருகின்ற 26.11.2020 அன்று நடத்தப்பட இருக்கும் மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
44 தொழிலாளர் சட்டம்
முதலாளிகளை மட்டுமே மனதில் கொண்டு, அவர்கள் மேலும் மேலும் கொழிக்கும்படி வளர்க்கவும், முழு நேரமும் பாடுபடும் தொழிலாளர்களைத் தொடர்ந்து வஞ்சிக்கவுமான செயலில் மத்தியில் அமைந்துள்ள பா.ஜ.க. அரசு ஈடுபட்டு - ஏற்கனவே தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு இருந்த 44 தொழிலாளர் சட்டங்களுள்- 15 சட்டங்களை ரத்து செய்து விட்டது.
போர்ப் பிரகடனம்
பல நூற்றாண்டு காலமாகப் போராடிப் பெற்ற உரிமைகளை- தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை எல்லாம் ரத்து செய்யும் முன்பு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதங்கள் ஏதும் ஆக்கபூர்வமாக நடைபெறவில்லை. ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, கூலிக் குறைப்பு, குழந்தைத் தொழிலாளரை அனுமதித்து குலக்கல்வித் திட்டத்தைப் புகுத்துவது, என இந்த நான்கு சட்டத் தொகுப்புகள் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட பா.ஜ.க. அரசின் வறட்டுப் "போர்ப்பிரகடனமாக" இருக்கிறது.
தொழிலாளர் நலன்
ஆகவே, இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் - இதை ஏதோ தொழிற்சங்கங்கள் மட்டும் எதிர்க்க வேண்டிய சட்டங்கள் என்று கருதிவிடாமல் - தொழிலாளர் நலனில் ஆர்வமும் அக்கறையும் உள்ள அனைத்துக் கட்சிகளும் - அமைப்புகளும் ஒரே அணியில் நின்று ஒரு முகமாகப் போராடிட முன்வர வேண்டும்.