திமுக நிர்வாகிகள் திடீர் தர்ணா.. ‘தேர்தலை நடத்தாமல் மா.செவை நியமிக்க திட்டம்?’ - பரபரத்த அறிவாலயம்!
சென்னை : திமுக உட்கட்சித் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று தென்காசி வடக்கு மாவட்ட கழகத்தினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் குவிந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி வடக்கு மாவட்டத்தில் தேர்தல் நடத்தாமல் மாவட்ட செயலாளரை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக குற்றம்சாட்டி தற்போதைய மாவட்ட செயலாளர் செல்லதுரையின் ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆயத்தமாக, பல மாவட்ட செயலாளர்களை மாற்ற திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தென்காசி வடக்கு மாவட்ட திமுகவில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கைமாறிய “குட் லிஸ்ட்”! திமுக சீனியர்களுக்கு ரெஸ்ட் - மாவட்டத்தில் யாருக்கு பவர்? கட்சியில் “மாற்றம்”
திமுக உட்கட்சி தேர்தல்
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
பரபர வேட்பு மனு தாக்கல்
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் கலை உள்ளிட்டோர் வேட்பு மனுக்களை பெற்று வருகின்றனர். வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில்19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று வரை 56 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். மீதமுள்ள 16 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
தர்ணா போராட்டம்
சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லதுரைக்கு ஆதரவாக அம்மாவட்ட திமுகவினர் அண்ணா அறிவாலயம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனுஷ் குமார் vs செல்லதுரை
தேர்தல் நடத்தாமலேயே எம்.பி தனுஷ் குமாரை மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டி தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லதுரையின் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினர். திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
சமாதானம் பேசிய நிர்வாகிகள்
இதையடுத்து, காவல்துறையினர் அவர்களுடன் பேசிப் பார்த்தனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லாத நிலையில், தர்ணாவில் ஈடுபட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அழைத்துப் பேசுவார் என உறுதி அளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அறிவாலய வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.