திருவாரூர் வேட்பாளராக கருணாநிதி குடும்பத்தினர் வேண்டாம்.. அதிரடி கருத்து கணிப்பு முடிவு
கருணாநிதி குடும்பத்துக்கு ஆதரவு உள்ளதா என கருத்து கணிப்பில் தெளிவாகி உள்ளது.
Recommended Video
சென்னை: திருவாரூரில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் போட்டியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் ஒரு பிரிவினரிடம் இருந்தாலும் கூட அது வேண்டாம் என்ற கருத்தும் பலமாக உள்ளது தெரிய வந்துள்ளது.
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க போவதால் அதற்கான வேட்பாளர்கள் அறிமுகம், பிரச்சார வியூகம் என ஒவ்வொரு கட்சிகளும் மும்முரத்தில் இறங்கி உள்ளன.
இந்த தொகுதி திமுகவுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் என்பதால், மக்களின் எண்ணத்தை அறிய ஒன் இந்திய தமிழ் கருத்து கணிப்பு ஒன்றை நேற்று நடத்தியது.
ஆப்ஷன்கள்
அதில் திருவாரூர் தொகுதிக்கு திமுக சார்பில் யார் போட்டியிடலாம் என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு சில பதில்களும் தரப்பட்டன. ஒன்று, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அடுத்து கனிமொழி, செல்வி, மு.க.தமிழரசு, உதயநிதி ஸ்டாலின், அழகிரி, யாராவது கட்சிக்காரர் மற்றும் நோ கமெண்ட்ஸ் என்று வரிசைப்படுத்தப்பட்டன.
ஸ்டாலின் ஓட்டுக்கள்
வாசகர்கள் இதற்குரிய தங்கள் கருத்துக்களையும் வாக்குகளாக தெரிவித்துள்ளனர். அதன்படி பார்த்தால், கட்சி தலைவரும், எல்லாரும் எதிர்பார்க்க கூடிய ஸ்டாலினுக்கே 15.86 சதவீத வாக்குகள்தான் கிடைத்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
கனிமொழிக்கு 4.22 சதவீதமும், செல்விக்கு 9.1 சதவீதமும், முக.தமிழரசுக்கு 0.65 சதவீதமும், உதயநிதி ஸ்டாலினுக்கு 12.52 சதவீதமும், அழகிரிக்கு 13.22 சதவீதமும் கிடைத்துள்ளது. யாராவது கட்சிக்காரருக்கு 30.77 சதவீதமும், நோ கமெண்ட்ஸ்க்கு 13.65 சதவீத ஓட்டுக்களும் பதிவாகி உள்ளன.
ஆதரவு இல்லை
இந்த கருத்துக்கணிப்பு மூலம் நமக்கு தெரிய வருவது என்னவென்றால், கருணாநிதியின் சொந்த தொகுதியே என்றாலும் கூட அவருடைய குடும்பத்தினருக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. கருணாநிதி மீதான நம்பிக்கை, பாசம், அபிமானம் ஆகியவை அவர் மீது மட்டுமே இருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.
ரொம்பவும் குறைவுதான்
என்னதான் கருணாநிதி இறந்து அதற்கான அனுதாப ஓட்டுக்கள் என்று எடுத்து கொண்டாலும், ஸ்டாலினுக்கு 15.86 என்பது ரொம்பவும் கம்மிதான். தொகுதியில் நன்கு அறிமுகமான செல்விக்கே 9.1 சதவீதம் என்றால், கருணாநிதியின் செல்ல மகளான கனிமொழிக்கு வெறும் 4.22 சதவீதம்தான் கிடைத்துள்ளது. இது உதயநிதி பெற்ற சதவீதத்தைவிட மிகவும் குறைவுதான்.
திமுக உறுப்பினர்
கருணாநிதி குடும்பத்தைச் சேராத திமுகவினர் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம் என்பதே நமது வாசகர்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. கிட்டத்தட்ட 30.77 சதவீதம் வாக்களித்திருக்கிறார்கள். இதன் மூலம் கருணாநிதி இடத்தை நிரப்ப ஒரு கட்சிக்காரரே தேவை என்ற உள்ளக்கிடக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவே உணர முடிகிறது. கருணாநிதியை ஏற்கும் மக்கள், அவரது இடத்திற்கு அவரது குடும்பத்தினர் வர வேண்டும் என்ற கருத்தை ஏற்கவில்லை என்றும் உணர முடிகிறது.