ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்களாக சண்முகம், வில்சன் போட்டி- மதிமுகவுக்கு 1 இடம்!
Recommended Video
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுகவின் வேட்பாளர்களாக தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்களான அதிமுகவின் அர்ஜூனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா ஆகியோரது பதவிக் காலம் வரும் 24-ந் தேதி முடிவடைகிறது. திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த கனிமொழி லோக்சபா தேர்தலில் வென்றதால் தமது பதவியை ராஜினாமா செய்தார். இந்த 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் வரும் 11-ந் தேதி. இதனைத் தொடர்ந்து போட்டி நீடித்தால் 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
ஒரு எம்.பிக்கு 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு
தமிழக சட்டசபையில் உள்ள தற்போதைய பலத்தின் அடிப்படையில் ஆளும் அதிமுகவுக்கு 3; எதிர்க்கட்சியான திமுகவுக்கு 3 எம்.பிக்கள் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
பாமகவுக்கு 1 இடம்?
லோக்சபா தேர்தலின் போது பாமகவுக்கு 1 ராஜ்யசபா எம்.பி. இடம் வழங்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது. இதனடிப்படையில் பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு ஒரு இடத்தை அதிமுக ஒதுக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் அதிமுக அரசை பாமக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ராஜ்யசபா எம்.பி. சீட்டை தர மறுத்ததாலே அதிமுக மீது பாமக பாய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
முட்டி மோதும் அதிமுக பிரமுகர்கள்
அதிமுகவில் எஞ்சிய 2 இடங்கள் யாருக்கு என்பதில் பெரும் போட்டி நிலவுகிறது. லோக்சபா தேர்தலில் தோற்ற தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, அன்வர்ராஜா, கோகுல இந்திரா என பலரும் அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் அதிமுகவில் யாருக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கப் போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. நாளை மறுநாள் அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் என தெரிய கூடும்.
ராஜ்யசபா எம்.பி.யாகும் வைகோ
திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களை ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். 3 ராஜ்யசபா இடங்களில் 1 இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடக் கூடும் என எதிர்பாக்கப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வைகோ மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைய உள்ளது தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொமுச சண்முகத்துக்கு வாய்ப்பு
எஞ்சிய 2 இடங்களுக்கான திமுகவின் வேட்பாளர்களையும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொமுசவின் பொதுச்செயலாளரான சண்முகம் மற்றும் மூத்த வழக்க்றிஞர் வில்சன் ஆகியோ ராஜ்யசபா வேட்பாளர்கள் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். சண்முகத்துக்கு வாய்ப்பு அளித்ததன் மூலம் தொழிற்சங்கத்தினரை தங்கள் வாக்கு வங்கிகளாக தக்க வைக்க முடியும் என்பது திமுகவின் கணக்கு.
வில்சனுக்கும் இடம்
மூத்த வழக்கறிஞர் வில்சன் அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்தார். அவரை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்வதற்கான இடத்தை ஒதுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டு இரவோடு இரவாக அனுமதி பெற்று தந்தவர் வில்சன். இந்த நற்பெயரின் அடிப்படையில் வில்சனுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.