வன்னியர் ஓட்டுக்களை அள்ளு.. பாமகவை தள்ளு.. திமுகவின் அதிரடி வியூகம்!
சென்னை: திமுக கூட்டணியில் பாமக இடம்பெறாது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.. திமுக தலைவர்களின் அடுத்தடுத்த மூவ்கள் இதை உறுதி செய்கின்றன.
பாமகவை பொறுத்தளவில், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கடந்த காலங்களில் கூட்டணி வைத்துள்ளது. இந்த கட்சி பலமாக இருப்பது வட தமிழகத்தில்தான். அதிலும், வன்னியர் ஜாதி பிரிவினரிடையே அக்கட்சி தொடர்ந்து செல்வாக்கோடு இருந்து வருகிறது.
இருப்பினும், கடந்த சட்டசபை தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினர். ஆனால் ஒரு தொகுதியிலும் பாமக வெற்றிபெறவில்லை.
அதிமுக கூட்டணியில் பாமக
எனவே, கடந்த லோக்சபா தேர்தலின்போது, பாமகவை, திமுக தங்கள் கூட்டணிக்கு கொண்டுவர முயன்றதாக கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து திமுக தலைமை மீளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு தேர்தலின்போதும் பாமகவை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் போட்டி போடும் நிலையை முடிவுக்கு கொண்டுவர திமுக முடிவு செய்துவிட்டது என்பதை அக்கட்சி செயல்பாடுகள் உறுதியாக கூறுகின்றன.
வேல்முருகன் செல்வாக்கு
திமுகவின் முதல் நகர்வு, வேல்முருகனை நோக்கியிருந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்பு பாமகவில் இருந்தவர். வேல்முருகன் பாமகவில் இருந்தபோது பண்ருட்டி தொகுதியில் 2001ம் ஆண்டு மற்றும் 2006 தேர்தல்களில் வென்று தொடர்ந்து இருமுறை எம்.எல்.ஏ வாக இருந்துள்ளார். 2016 சட்டசபை தேர்தலில், பண்ருட்டி தொகுதியில், தனித்து போட்டியிட்ட வேல்முருகன் 30,528 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.
திமுக கூட்டணியில் வேல்முருகன்
வேல்முருகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் பண்ருட்டியில் போட்டியிட இம்முறை திமுக பச்சைக்கொடி காட்டும் என்று கூறப்படுகிறது. வன்னியர்களின் வாக்குகளை வேல்முருகனை வைத்து திமுக கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியாகவும் இதை பார்க்கலாம். ஏற்கனவே திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் வன்னியர் வாக்குகளை ஈர்ப்பதில் முக்கிய பங்காற்றுவார் என்பதால், இவர்கள் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டால், பாமக ஓட்டு வங்கியில் ஓட்டை போடலாம் என்பது திமுக கணக்கு.
|
காடுவெட்டி குரு வீட்டுக்கே போன உதயநிதி
இத்தோடு விடவில்லை திமுக. பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், புகழ்பெற்றவராகவும் விளங்கிய மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கடலரசன் திமுகவில் இணைந்தார். காடுவெட்டி குரு வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் என்பது இதில் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ளது காடுவெட்டி கிராமம். அங்கு நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்று, குரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். குருவின் தாயார் கல்யாணியிடம் ஆசி பெற்றார்.
வன்னியர் ஆதரவு
உதயநிதி வருகை மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், காடுவெட்டி குரு ஒரு காலகட்டத்தில், மறைந்த முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தவர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் காடுவெட்டி குரு வீட்டுக்கே சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதன் மூலம், பழைய பகைமைகள் எதுவும் இப்போது இல்லை என்ற சிக்னல்களை அவர் அளித்துள்ளார். அதேநேரம், காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் இறந்தபோது, பாமக உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை குரு குடும்பத்தார் முன்வைத்து வருகிறார்கள். எனவே வன்னியர்களின் ஒரு பிரிவினர் ஆதரவு காடுவெட்டி குரு குடும்பத்திற்கு இருக்கிறது என்பதும் இதில் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது.
அதிரடியை ஆரம்பித்த திமுக
இப்படியெல்லாம் வன்னியர்களுடன் திமுக நெருக்கத்தை ஏற்படுத்திவிட்ட நிலையில்தான், தைரியமாக பாமகவை அடித்து விளாச ஆரம்பித்துள்ளது திமுக. சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. தயாநிதி மாறனிடம், பாமகவை திமுக கூட்டணியில் இணைக்க முயற்சி நடக்கிறதா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால் தயாநிதி மாறன், அதிரடியாக ஒரு பதிலைச் சொன்னார். "அன்புமணி ராமதாசுக்கும், ராமதாசுக்கும் கொடுக்கும் அளவுக்கு திமுகவிடம் பணம் இல்லை. அதிமுகவிடம் பணம் இருப்பதால் அவர்கள் அங்கே கூட்டணி வைத்தார்கள்" என்று தயாநிதி மாறன் கூறினார்.
திமுக வியூகம்
இந்த பேட்டிக்கு பிறகுதான் பாமகவினர் கருப்புக் கொடி காட்ட முயல, பிறகு தயாநிதி மாறன் கார் மீதும் தாக்குதல் நடந்தது. இது திமுக-பாமக கூட்டணி ஏற்படாது என்பதற்கான விரிசலாக பார்க்கப்படுகிறது. திமுக நாளிதழான முரசொலியிலும் இன்று ராமதாசை தாக்கி கட்டுரை வெளியாகியுள்ளது. இது அத்தனையையும் வைத்து பார்த்தால், வன்னியர் ஓட்டுக்கள் வேண்டும், பாமக வேண்டாம் என்பதுதான் திமுக வியூகம் என்பது பக்காவாக தெரிகிறது.