அப்பாடா... நாங்குநேரி கிடைச்சிடுச்சு... ஸ்டாலின் அறிவிப்பால் காங். நிம்மதி பெருமூச்சு!
Recommended Video
சென்னை: நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது அக்கட்சியினரை நிம்மதி அடைய வைத்துள்ளது.
நாங்குநேரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் வசந்தகுமார். இவர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். இதனால் நாங்குநேரில் எம்.எல்.ஏ. பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார்.
இதனால் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டது. அப்போது முதல் தற்போது இத்தேர்தலானது திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி வருகிறது.
வேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி... விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி!
கடுப்பான காங்கிரஸ்
முதலில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் முழக்கம் எழுப்பத் தொடங்கினர். ஆனால் இது தங்களது தொகுதி என்பதால் காங்கிரஸ் கட்சி இதை ரசிக்கவில்லை.
கலகமூட்டிய கராத்தே
இந்த களேபரங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தனித்து போட்டியிட வேண்டும் என கொளுத்திப் போட்டார் கராத்தே தியாகராஜன். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கராத்தே தியாகராஜன், காங்கிரஸில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
தனித்து போட்டி என சர்ச்சை
நாங்குநேரி தொகுதி யாருக்கு என்பதில் திமுகவும் கனத்த மவுனம் காத்து வந்தது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸுக்குத்தான் ஒதுக்க வேண்டும் இல்லையெனில் தனித்து போட்டியிடலாம் என தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் கருத்துகள் வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் காங்கிரஸ் தனித்து போட்டியிடப் போகிறதா? என்கிற கேள்வி எழுந்தது.
அக்டோபர் 21-ல் தேர்தல்
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அக்டோபர் 21-ந் தேதி நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்திருக்கிறார். இத்தொகுதியில் அக்டோபர் 24-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தற்போது இத்தொகுதியை காங்கிரஸுக்கே திமுக ஒதுக்குமா? அல்லது திமுக போட்டியிட் முனையுமா? என்கிற கேள்வி. எழுந்தது.
ஸ்டாலினுடன் அழகிரி சந்திப்பு
இதனிடையே இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது நாங்குநேரி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
காங்கிரஸுக்கு நாங்குநேரி
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நாங்குநேரி மற்றும் புதுவை காமராஜர் நகர் சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்தார். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக மீண்டும் போட்டியிடும் என்றார். இதன்மூலம் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் வீசிய புயல் தற்போது கரையை கடந்திருக்கிறது.