அதிகபட்சம் 25தான்..கறார் காட்ட போகும் திமுக..அட்லீஸ்ட் 35 தொகுதியாவது... கெஞ்ச காத்திருக்கும் காங்.
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது? என்பதை கடைகோடி கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்ல.. இந்திய அரசியலை ஆட்டுவிக்கும் டெல்லி மேலிடங்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான விவாதங்கள், வியூகங்கள், யூகங்கள் எல்லாம் அனல் பறக்கின்றன. இதில் அதிமுக கூட்டணியில் எத்தனை கட்சி இருக்கும்? திமுக கூட்டணி நீடிக்குமா? உடையுமா? என்பதில் தொடங்கி கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது வரை பரபரப்பாக பேசப்படுகிறது.
என்னதான் சொல்றாங்கன்னு பார்ப்போம்...திமுகவிடம் கேட்க வேண்டிய 60 தொகுதிகள் பட்டியலை தயார் செய்த காங்.
80 தொகுதி பட்டியல்
திமுக கூட்டணியைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல்; திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்கிற ரேஞ்சில் 60 தொகுதிகளைக் கேட்பது என முடிவு செய்திருக்கிறது. இதற்காக 80 தொகுதிகள் கொண்ட ஒரு உத்தேசபட்டியலை தயர் செய்திருப்பதையும் நாம் பதிவு செய்திருக்கிறோம்.
13 தொகுதிகளில் தொடங்கி...
திமுகவானது நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகளை ஒதுக்கப் போவது இல்லை என்பது அந்த கட்சிக்கே நன்றாக தெரியும். ஆனாலும் பேரத்தை 60-ல் இருந்து தொடங்குவது என முடிவு செய்திருக்கிறது. திமுகவோ 200க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவது என்கிற முடிவில் இருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு 13 அல்லது 15- என்கிற எண்ணிக்கையில் இருந்து தொடங்குவது என திட்டமிட்டுள்ளதாம்.
அட்லீஸ்ட் 35 கொடுங்க..
திமுக தரப்பில் மிக மிக அதிகபட்சமாக 20 முதல் 25 தொகுதிகள் வரைதான் காங்கிரஸுக்கு தர முடியும் என சொல்ல இருக்கிறது. வேறுவழியே இல்லை என்கிற நிலையில் ஆகக் குறைந்தது 35 தொகுதிகளையாவது திமுகவிடம் கேட்கலாம் என திட்டமிட்டுள்ளதாம் காங்கிரஸ். அப்படி நாங்கள் கேட்கும் 35 தொகுதிகளைக் கூட தர முடியாது எனில் கூட்டணிக்கு குட்பை சொல்வோம் என மிரட்டிப் பார்ப்பது என்பது காங்கிரஸின் அடுத்த ப்ளானாம்.
மிரட்டல் வியூகம்
அதாவது நாங்க ரஜினி தலைமையிலான கூட்டணிக்குப் போகவும் வாய்ப்பிருக்கிறது.. ஏன் அதிமுக கூட்டணியில் கூட போய் சேருவோம் என்கிற ரேஞ்சுக்கு மிரட்டிப் பார்ப்போம் என்பதும் காங்கிரஸின் வியூகமாம். ஆனால் கூட்டணியைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்தானே 200க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட திமுக தயாராக இருக்கிறது. இதனால் காங்கிரஸின் பூச்சாண்டி மிரட்டல்களை திமுக பொருட்படுத்தாது எனவும் கூறப்படுகிறது.