விவசாய நிலங்களை அழிப்பதா? ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஜன.28-ல் திமுக ஆர்ப்பாட்டம்: முக ஸ்டாலின்
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஜனவரி 28-ந் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் விவசாயிகள் பொதுமக்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் மத்திய பா.ஜ.க. அரசு, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 341-க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட, சுற்றுச்சூழல் அனுமதி, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஆகியவை தேவையில்லை என்று, 16.1.2020 அன்று அறிவித்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் துரோகமாக தி.மு.க. இதனைக் கருதுகிறது.
மத்திய பா.ஜ.க. அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், அவரது அமைச்சரவையிலேயே இருக்கும் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் அனுமதி மற்றும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் எல்லாம் நடத்த தேவையில்லை என்று இன்னொரு புறம் மத்திய அரசுக்கு நேரெதிரே கடிதம் எழுதி கோரிக்கை வைப்பதுமாக, விவசாயிகளை ஏமாற்றும் ஒரே நோக்கத்துடன் ஒரு கபட நாடகத்தை நடத்தி ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்திட முயலாமல், அ.தி.மு.க. அரசு முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் திகழ்கிறது.
எவ்வித அனுமதியும் பெறாமல், சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு உட்படாமல் இதற்கு முன் இருந்த எந்த மத்திய அரசும், இப்படி சர்வாதிகாரமாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, விவசாய நிலங்களை அழித்து நிறைவேற்றிட எண்ணியதில்லை. ஆனால் தமிழக உரிமைகளுக்கும் விவசாயிகளின் நலன்களுக்கும் முற்றிலும் விரோதமாக மத்திய பா.ஜ.க. அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு, தமிழகத்தில் உள்ள வேளாண் பகுதிகளை பாலைவனமாக திட்டமிட்டு மாற்றிடத் துணிந்துள்ளது.
நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்; இன்றும் விசாரணை
எனவே, மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் மாநில அ.தி.மு.க. அரசின் விவசாயிகள், வெகுமக்கள் விரோத செயல்களை கண்டித்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி, மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் திரும்பப் பெற்று, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்றும், 28-ந்தேதி( அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டத்தலைநகரங்களில், தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.